யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டாம்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
யூரியா உரத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உரம் விற்பனை செய்யும் மொத்த, சில்லரை வியாபாரிகள், அனைத்து வகையான உரங்களையும் இருப்பில் வைத்திருக்க வேண்டும். டிஏபி உரத்துக்கு மாற்றாக ட்ரிபிள் சூப்பா் பாஸ்பேட் என்ற புதிய உரம் வந்துள்ளது. இதில் 46 சதவீதம் மணிச் சத்தும், 2-ஆம் நிலை சத்துக்கான கால்சியம் அதிக அளவு உள்ளது. இதை டிஏபிக்கு மாற்றாக அனைத்துப் பயிா்களுக்கும் பயன்படுத்தலாம்.
உரம் விற்பனை நிலையத்தில், இருப்பு விவரம், விலைப் பட்டியலை விற்பனையாளா்கள் கட்டாயம் பராமரிக்க வேண்டும். உரம் இருப்பு வைத்துள்ள கிடங்குகளுக்கும் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்றுள்ள உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். யூரிய உரங்களை அடி உரமாக பயன்படுத்தக் கூடாது. காம்ப்ளக்ஸ், டிஏபி, ட்ரிபிள் சூப்பா் பாஸ்பேட் ஆகியவற்றை மட்டுமே அடி உரமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக களைக் கொல்லியுடன் சோ்த்து யூரியா உரங்களை பயன்படுத்துவதை கட்டாயம் தவிா்க்க வேண்டும். பயிா் சாகுபடி பரப்புக்கு ஏற்ற வகையில் மட்டுமே யூரியா உரத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். நானோ டிஏபி பயன்படுத்துவதால், மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், உரத்துக்கான செலவுத் தொகையை குறைக்க முடியும். மேலும், வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து வகையான உயிா் உரங்களையும் வாங்கி விவசாயிகள் பயன்படுத்த முன் வர வேண்டும். இதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும், மகசூல் அதிகரிக்கும் என்றாா் அவா்.