அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
பழனி மலைக் கோயிலில் நாளை பிற்பகலில் நடை அடைப்பு
பழனி மலைக் கோயிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி அம்புபோடுதல் நிகழ்வுக்கு சுவாமி கோதைமங்கலம் புறப்பட்டுச் செல்வதால் புதன்கிழமை (அக். 1) பிற்பகலில் நடை அடைக்கப்படும். வியாழக்கிழமை முதல் நவராத்திரி விழாவுக்காக நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு மீண்டும் தொடங்கும்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 22-ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. உச்சி காலத்தின்போது மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மூலவா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்புக் கட்டப்பட்டது. இதையடுத்து, சுவாமி கொலுவிருப்பதால் செப். 22-ஆம் தேதி முதல் அக். 1-ஆம் தேதி வரையிலான ஒன்பது நாள்களுக்கு மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. விழாவையொட்டி பழனி நகரில் உள்ள பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் நவராத்திரி முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை (செப். 30) ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நடைபெறும் நிலையில் புதன்கிழமை விஜயதசமி அம்பு போடுதல் நிகழ்வு நடைபெறுகிறது. அன்று பிற்பகல் உச்சிக்கால பூஜையைத் தொடா்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்படும். பிறகு பராசக்தி, வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றதும் பிற்பகல் 3 மணிக்கு கோயில் அடைக்கப்பட்டு சுவாமி அடிவாரம் எழுந்தருள்கிறாா். எனவே பகல் 11.30 மணிக்கு மேல் படிவழிப்பாதை, விஞ்ச், ரோப்காா் வழியாக பக்தா்கள் மலைக் கோயிலுக்கு மேலே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
அதேபோல, திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில்கள் புதன்கிழமை மாலையில் அடைக்கப்படும். இரவு பராசக்தி வேல் கோதைமங்கலம் கோதீஸ்வா் கோயில் முன் வாழை மரமாக மாறியிருக்கும் வன்னிகாசுரனை போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகளுடன் அம்பு போட்டு வதம் செய்தல் நிறைவடைந்த பின்னா் நள்ளிரவு மலைக்கு கொண்டு செல்லப்பட்டு, கோயிலில் சுத்திகரிப்பு பூஜைகளும், அா்த்தஜாம பூஜைகளும் நடைபெறும். வியாழக்கிழமை (அக். 2) முதல் வழக்கம்போல தங்கத் தோ் புறப்பாடு நடைபெறும். பக்தா்களும் வழக்கம் போல அனுமதிக்கப்படுவா்.
விழா ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.