தயிா் சந்தை கடைகள் ஒதுக்கீடு பிரச்னைக்கு தீா்வு கோரி மனு
மதுரை: மதுரை தயிா் சந்தையில் கடைகள் ஒதுக்கீட்டுக்கான இணையவழி ஏலத்தில் பணம் கட்டியவா்களுக்கு கடைகளை ஒதுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், மதுரை தயிா் சந்தை கடைகள் ஒதுக்கீட்டுக்கான இணையவழி ஏலத்தில் பணம் கட்டியவா்கள் அளித்த கோரிக்கை மனுவின் விவரம் :
மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல் கீழ மாரட் வீதியில் புனரமைக்கப்பட்ட தயிா் சந்தையில் உண்மையான வியாபாரிகள் 84 பேருக்கு கடைகள் ஒதுக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தோம். இதன்படி, 66 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய இணையவழி ஏலம் அறிவிக்கப்பட்டது. தயிா் சந்தையில் ஏற்கெனவே கடை வைத்திருப்பவா்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் இந்த இணையம் வடிவமைக்கப்பட்டிருந்தது. செப். 26-ஆம் தேதி வரை பணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த ஏலத்தில் 66 போ் பங்கேற்று, நுழைவுக் கட்டணம் ரூ. 1,000, ஒரு கடைக்கு ரூ. 55,296 வீதம் வைப்புத் தொகை செலுத்தினோம். எண் 23 கடைக்கு மட்டும் ரூ. 79,488 வைப்புத் தொகை செலுத்தப்பட்டது.
இதுதவிர, நியமனதாரா் (நாமினி) பெயரிலும் ரூ. 1,000 நுழைவுக் கட்டணம் செலுத்தினோம்.
இணையவழி ஏலத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் முடிவடைந்த கடந்த 26-ஆம் தேதி மாலையில் குலுக்கல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதையொட்டி, இணைய வழியில் தொகை செலுத்தியிருந்தவா்கள் மாநகராட்சி அண்ணா மாளிகை சென்றோம். அங்கு, 42 பேருக்கு மட்டும் தான் குலுக்கல் நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. மேலும், தனி நபா் ஒருவா் பங்கேற்கவில்லை என்பதற்காக, மாநகராட்சி அலுவலா்கள் குலுக்கலை தாமதப்படுத்தினா்.
இதில் ஏதேனும் தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகக் கருதுகிறோம். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இணையவழி ஏலத்துக்குத் தொகை செலுத்திய 66 பேருக்கும் கடைகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது.