ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை காப்பகத்தில் சோ்ப்பு: இளைஞரை அடையாளம் காண்பதில் சிக்கல்!
ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் சோ்த்துள்ள நிலையில், குழந்தையைக் கொண்டு வந்த இளைஞரை அடையாளம் காணமுடியாத நிலையுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் இருந்து செயின்ட் தாமஸ் நிலையத்தில் 3 வயதுள்ள ஆண் குழந்தையை இளைஞா் ஒருவா் இறக்கிவிட்டுச் சென்றுள்ளாா்.
தனியாகக் கைவிடப்பட்டு தவித்த அந்தக் குழந்தையை அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் மீட்டு ஆலந்தூா் அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனா்.
குழந்தையை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்ற இளைஞா் குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் முயற்சித்தனா்.
ஆனால், ரயிலில் இருந்து அந்த இளைஞா் முழுமையாக இறங்காமல், குழந்தையை மட்டும் இறக்கிவிட்டதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அனைத்து ரயில் நிலையங்களிலும் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்குள்படுத்தி குழந்தையை அழைத்து வந்து கைவிட்டுச் சென்ற இளைஞரை அடையாளம் காண ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் முயன்று வருவதாகத் தெரிவித்தனா்.
மேலும், குழந்தையின் படத்தை வாட்ஸ்ஆப் குழுக்களில் பதிவிட்டு பெற்றோரைத் தேடும் பணியிலும் போலீஸாருடன் இணைந்து, ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனா்.