ரயில் விபத்து எதிரொலி: செம்மங்குப்பத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர்!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், நேற்று(ஜூலை 8) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில், சாருமதி (16), விமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் கேட் கீப்பராக இருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மாவின் கவனக்குறைவால்தான் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கருதிய மக்கள் அவரை சரமாரியதாகத் தாக்கினர்.
பலத்த காயமடைந்தவரை மீட்ட காவல் துறையினர் கைது செய்த நிலையில், ரயில்வே மேலாளர், பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவரை புதிய கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், செம்மங்குப்பம் பகுதிக்கு இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Train accident: Gatekeeper from Tamil Nadu to Chemmankuppam!
இதையும் படிக்க : கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு!