ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
ராமநாதபுரம்: எடப்பாடி பிரசாரத்தில் பிக்பாக்கெட்; கூட்டத்தில் பணத்தை இழந்த அதிமுகவினர் கவலை
ராமநாதபுரம் மாவட்டத்தில் எடப்பாடி பிரசாரம்
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இரண்டாம் கட்ட சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள அவர் கடந்த 2 நாள்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் திருவாடனை தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்களத்தில் பிரசார பயணத்தை துவக்கிய அவர் இரவில் பரமக்குடியில் நடந்த பொது கூட்டத்தில் பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் தங்கிய எடப்பாடி பழனிசாமி, நேற்று காலை தான் தங்கியிருந்த தனியார் ஹோட்டலில் உள்ள அரங்கத்தில் விவசாயிகள், மீனவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பேசிய அவர், ''அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அப்போது உங்களின் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்படும்'' என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அளிக்க ஏராளமானோர் அரங்கத்தில் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். அவர்களிடம் பரிசு மற்றும் சால்வைகளை பெற்றுக்கொண்ட அவர், ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரிடமும் சால்வைகளை பெற முடியாமல் எரிச்சல் அடைந்தார். இதனால் மாவட்ட செயலாளரிடம் கடிந்து கொண்ட அவர் தொண்டர்கள் சந்திப்பை இடையிலேயே முடித்துக் கொண்டார்.
இதனை தொடர்ந்து மாலையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பிரசார கூட்டத்திற்கு சென்ற பழனிசாமியை வரவேற்க ரோமன் சர்ஜ் பகுதியில் இருந்து அரண்மனை வரை ஆயிரக்கணக்கான அதிமுகவினர் வரிசையில் நின்றனர். ஆனாலும் இடையிடையே தொண்டர்கள் இன்றி இடைவெளி காணப்பட்டது. இதனால் பிரச்சார வேனில் இருந்தபடியே அதிமுகவினரின் வரவேற்பை ஏற்றவாறு அரண்மனை பகுதிக்கு சென்றார்.

அங்கு கூடியிருந்த அதிமுக, பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
''50 மாத கால திமுக ஆட்சியில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 525 அறிவிப்புகளில் 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாத நிலையில் விழி பிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.
திமுகவை கார்ப்பரேட் கம்பெனியாக மாற்றிவிட்ட அவரது ஆட்சியில் எல்லா தரப்பிலும் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
புயல்,வெள்ளம், வறட்சி, கொரனா என எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் சாமானிய மக்களுக்கு எந்த நன்மையும் இல்லாத ஆட்சியின் பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். குடும்ப ஆட்சி எனும் கொடிய நோய் அவரையும் அவரது ஆட்சியையும் பிடித்திருக்கிறது. இதனை மாற்ற வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்'' என்றார்.
பரவசமடைந்த எடப்பாடி
தென்மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்ய வரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேவர் சமூகத்தினர் சிலர் கண்டன போஸ்டர்களை மாவட்டம் முழுவதும் ஒட்டியிருந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் பிசுபிசுக்கும் என கூறப்பட்டது. ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தை சேர்ந்த முக்கிய நபர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அவர்களை சமாதானபடுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையில் கூட்டம் திரண்டது. இதனால் பரவசமடைந்த அவர் அரை மணி நேரத்திற்கு மேலாக உரையாற்றியதுடன், அதே உற்சாகத்துடன் முதுகுளத்தூரிலும் தனது பிரசாரத்தை தொடர்ந்தார்.

கூட்டத்தில் கைவரிசை காட்டும் கும்பல்
பிரச்சார பயணத்தில் திரண்ட கூட்டத்தை கண்டு எடப்பாடி பழனிசாமி பரவசமடைந்த அதே வேளையில், ராமநாதபுரம் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக நிர்வாகிகள் பலரிடம் இருந்தும் பணம் திருட்டு போனது.
கோவையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை துவங்கும் போது, கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட திருட்டுக் கும்பல் பலரிடம் திருடியது. அதே போல இங்கும் திரண்டிருந்த கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட பிக்பாக்கெட் கும்பல், அதிமுக நிர்வாகிகள் சிலரின் பாக்கெட்டிகளிலும் பணத்தை திருடிச் சென்றுள்ளது. கூட்டம் முடிந்த நிலையில், ஊர் திரும்ப முயன்ற அதிமுக நிர்வாகிகள் தங்களது பணம் களவாடப்பட்டதை அறிந்து கவலை அடைந்தனர்.
தேர்தல் பிரசார நேரங்களில் நடக்கும் இந்த திருட்டுகளை தவிர்க்க காவல்துறை மற்றும் பொதுமக்கள், கட்சியினர் விழிப்போடு இருப்பது அவசியம்.