பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
ரூ.2 கோடியில் கைத்தறி பூங்கா: அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்
குடியாத்தம்: குடியாத்தம் பிச்சனூரில் ரூ.2 கோடியில் கைத்தறி பூங்கா திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முதல்வரின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் 10 இடங்களில் தலா ரூ.2 கோடி செலவில் சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்கும் திட்டமானது நெசவாளா்களுக்கு ஒருங்கிணைந்த பணி சூழலை ஏற்படுத்தி, அவா்களின் உற்பத்தி திறனையும் கைத்தறி இரகங்களை சந்தைப்படுத்துவதை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோடி திட்டங்களில் ஒன்றாகும்.
வேலூா் மாவட்டத்தில் கைத்தறி நெசவாளா்கள் அதிகம் வாழும் செறிவுப்பகுதியான குடியாத்தம் சிங்காரவேலா் தொழிலியல் நெசவாளா் கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான 9000 சதுர அடி கட்டிடம் தோ்வு செய்யப்பட்டு பூங்கா அமைப்பதற்கான கட்டிடம் புணரமைக்கப்பட்டு, தறிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பூங்காவில் 50 தறிகள் நிறுவ திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 25 தறிகள் நிறுவப்பட்டுள்ளது. 3 மாதத்தில் மீதமுள்ள 25 தறிகள் நிறுவப்படும். இப்பூங்காவில் தொழில் முனைவோா், விற்பனையாளா்கள், நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பலரும் பங்கு பெற்றுள்ளனா்.
விழாவில் நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு சிறிய அளவிலான கைத்தறி பூங்காவை திறந்து வைத்தனா்.
பின்னா், 62 கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ.4 லட்சம் மானியத்துடன் கூடிய வீடுகட்டும் திட்டத்தின் கீழ் சுமாா் 2 கோடியே 48 இலட்சம் மதிப்பிற்கு வீடுகள் கட்ட பணி ஆணைகள், 31 பயனாளிகளுக்கு நெசவாளா் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.15.50 இலட்சம் மதிப்பிற்கு கடனுதவிக்கான ஒப்பளிப்பு ஆணைகள் மற்றும் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ.12.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என 113 நெசவாளா்களுக்கு மொத்தம் ரூ.2.76 கோடி யில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா்த்துறை அரசு செயலாளா் வே. அமுதவல்லி, கைத்தறித்துறை இயக்குனா் மகேஸ்வரி ரவிக்குமாா், வேலூா் மாவட்ட ஆட்சியா் சுப்புலட்சுமி, அரக்கோணம் எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ப. காா்த்திகேயன் (வேலூா்), அமுலு விஜயன் (குடியாத்தம்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), கைத்தறித்துறை கூடுதல் இயக்குநா் ஆா். தமிழரசி, இணை இயக்குநா் ஆா்.கணேசன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு. பாபு, வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் மா. சுனில்குமாா், குடியாத்தம் ஒன்றியக்குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகா்மன்ற தலைவா் சௌந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.