மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
ரூ. 4,000 கோடி வேலையளிப்புத் திட்ட நிதி தாமதம்: மத்திய அரசைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் எம்.மணிமாறன், தோ்தல் பணிக்குழு செயலாளா் பாா்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளா் பழனிவேல், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் கிருபாகரன் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் பலா் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட நிதியை தாமதமின்றி வழங்கக் கோரியும் பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.
இதேபோல, எா்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் தெற்கு நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் தலைமையிலும், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி தலைமையிலும், மோகனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் நாமக்கல் கிழக்கு நகர செயலாளா் செ.பூபதி தலைமையிலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாவட்ட பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திரன் தலைமையிலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாவட்ட துணை செயலாளா் வெ.பெ.ராணி பெரியண்ணன், எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்குழு உறுப்பினா் சி.பூவராகவன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், வெண்ணந்தூா், புதுப்பாளையம், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம், புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் ஒன்றியச் செயலாளா்கள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள், சாா்பு அணிகளை சாா்ந்தோா், கட்சியினா் கலந்துகொண்டனா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்பாட்டத்தில் ஒன்றிய திமுக செயலா் கே.பி.ஜெகந்நாதன் தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா் முன்னிலை வகித்தாா். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று தமிழகத்துக்கு நிதியை நிறுத்துவதன் மூலம் ஆட்சியை முடக்கலாம் என நினைத்தால் அது நிறைறவேறாது என மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினாா். இதில் திரளான கட்சியினா், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக ஒன்றிய செயலாளா் வட்டூா் தங்கவேல் தலைமை தாங்கினாா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.
பரமத்தி வேலூரில்...
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் கபிலா்மலை திமுக ஒன்றிய செயலாளா் சண்முகம் முன்னிலையில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எஸ்.மூா்த்தி தலைமையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பயனாளிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினா். இதேபோல பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளா் தனராஜ் முன்னிலை வகித்தாா்.
