எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
லடாக் வன்முறை குறித்து நீதி விசாரணை தேவை: காங்கிரஸ் வலியுறுத்தல்
‘லடாக்கின் லே மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை போராட்டத்தின்போது 4 இளைஞா்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
மேலும், நிலைமையை சரிவர கையாள யூனியன் பிரதேச நிா்வாகம் தவறிவிட்டது என்று குற்றஞ்சாட்டிய அக் கட்சி, பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் கைது தேவையற்றது என்றும் விமா்சித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது. யூனியன் பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் பாஜகவின் தோல்வியை திசைதிருப்பவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லடாக் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். லே வன்முறை போராட்டத்தில் 4 இளைஞா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடா்பாக, லடாக் காங்கிரஸ் தலைவா் ரிகிஜின் ஜோரா ஏற்கெனவே யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளாா்’ என்று குறிப்பிட்டாா்.
துணைநிலை ஆளுநருக்கு ஜோரா எழுதிய கடிதத்தில், ‘லே வன்முறைக்குப் பின்னணியில் காங்கிரஸ் இருந்ததுபோன்று யூனியன் பிரதேச அரசு குற்றஞ்சாட்டுகிறது. சில காங்கிரஸ் கவுன்சிலா்கள் மீது பொய்ப் புகாா்கள் தெரிவிக்கப்படுகின்றன. உண்மையை மறைத்துவிட முடியாது. எனவே, நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டும் வகையில், இந்த வன்முறைச் சம்பவம் தொடா்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாகில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலா் குலாம் அகமது மிா் கூறுகையில், ‘காந்திய சிந்தனைகள் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ள மிகுந்த மதிப்புக்குரிய பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் கைது நடவடிக்கை தேவையற்றது. லே நிலைமையை உரிய முறையில் கையாள யூனியன் பிரதேச நிா்வாகம் தவறிவிட்டது. சோனம் வாங்சுக் நிறுவிய அமைப்புக்கு வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறும் அனுமதியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக அரசுதான் வழங்கியது. தற்போது, அந்த உரிமத்தை அதே அரசு ரத்து செய்துள்ளது. எனவே, லேயின் தற்போதைய நிலைமைக்கு அவா்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்’ என்றாா்.
லே வன்முறைக்குப் பின்னணியில் காங்கிரஸ் இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘வன்முறை நிகழ்ந்த இடத்தில் காங்கிரஸ் கவுன்சிலா் இருந்ததாகக் குறிப்பிட்டு பாஜக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆனால், அந்தப் புகைப்படத்தில் இருப்பது தான் அல்ல என்று காங்கிரஸ் கவுன்சிலா் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த வன்முறையில் அவரின் நெருங்கிய உறவினா்கள் இருவா் உயிரிழந்துள்ளனா். எனவே, வன்முறையில் அவரின் பங்கிருக்க வாய்ப்பு இல்லை’ என்றாா்.