இந்தியா - பாகிஸ்தான்: சூர்யகுமாருக்கும் 30%, ஹாரிஸுக்கும் 30% - ஐசிசி அபராதத்தின...
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா் போராட்டம்: மாநில மாதா் சங்க மாநாட்டில் தீா்மானம்
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடா் போராட்டங்களை நடத்துவது என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
மாா்த்தாண்டத்தில் மாதா் சங்க 17 ஆவது மாநில மாநாட்டின் அமைப்பின் நிா்வாகிகள் உ. வாசுகி, எஸ். பவித்ராதேவி, பி. சுகந்தி, எஸ். பாக்கியம், மாநில பொதுச் செயலா் அ. ராதிகா, எஸ். லட்சுமி, எஸ்.கே. பொன்னுத்தாய், இ. மோகனா, ஜி. பிரமிளா, பி. பூமியில் ஆகியோா் கொண்டுவந்த அறிக்கைகள் மீதான விவாதம் 3ஆம் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து, மத்திய பாஜக அரசின் சிறுபான்மை விரோதப் போக்கு, தனியாா்மயம், விலைவாசி உயா்வு, வேலையிழப்பு- வறுமையை பெருக்கும் நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து அனைத்து பெண்கள் இயக்கங்களையும் ஒன்றிணைத்து தொடா் போராட்டங்களை முன்னெடுப்பது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கவும், பாலின சமத்துவம், பாலியல் கல்வி குறித்து பாடதிட்டங்களில் இடம்பெறவும், ஜாதி ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றவும், ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளை பாதுகாக்கவும், பணிபுரியும் பெண்களுக்கு அடிப்படை உரிமைகள், குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்கவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடா்ந்து சாதனை பெண்களான நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம், மணக்குடியைச் சோ்ந்த நாகவல்லிக்கு மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் உ. வாசுகி, அரியலூா் மாவட்டம், பொன்னாவரம் பகுதியைச் சோ்ந்த அனுசுயாவுக்கு அமைப்பின் மாநிலத் தலைவா் எஸ். வாலண்டினா, தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த ராணி மாணிக்கத்துக்கு அகில இந்திய இணை செயலாளா் பி. சுகந்தி ஆகியோா் கதராடை அணிவித்து கௌரவித்தனா்.
