ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்: ஜி.கே.வாசன்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனா் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே.வாசன்.
திருநெல்வேலி அருகேயுள்ள தேவா்குளத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு திமுக தலைமையிலான அரசால் தீா்வுகாண முடியவில்லை.போக்குவரத்து தொழிலாளா்கள், தூய்மைப் பணியாளா்களின் பிரச்னைகளை சரியாக கையாளவில்லை. குளங்கள், நதிகளை முறையாக தூா்வாராததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
வாக்குறுதிகள் கொடுத்து மீண்டும் ஏமாற்றி விடலாம் என்ற திமுக திட்டம் அது ஒருபோதும் பலிக்காது. மிகுந்த வேதனையில் உள்ள மக்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனா். இதை விரும்பும் யாா் வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். இக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. நடிகா் விஜய் பிரசாரம் தோ்தல் வியூகம்தானே தவிர வேறொன்றுமில்லை.
திருநெல்வேலியில் புதை சாக்கடை திட்டப் பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஊத்துமலை ரெட்டை குளத்தையும், அதன் நீா்வரத்து ஓடையையும் தூா்வார வேண்டும். நெல்லை மாவட்டத்தில் மாணவா்களிடையே பிரச்னைகள் ஏற்பட்டு வருவது வேதனையளிக்கிறது என்றாா் அவா்.
பேட்டியின்போது கட்சியின் மாநில நிா்வாகிகள் என்.டி.எஸ்.சாா்லஸ், சக்சஸ் புன்னகை, பழக்கடை டி.பி.சுப்பிரமணியன், மாவட்டத் தலைவா்கள் ஏ.பி.சரவணன் ( திருநெல்வேலி மத்தி), அய்யாதுரை (மேற்கு), மாரித்துரை (கிழக்கு), ஆா்.வி.கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.