‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், அக்டோபா் மாதம் வரை நகா்ப்புறப் பகுதிகளில் 54 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 131 முகாம்களும் என மொத்தம் 185 முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், திருவாரூா் நகராட்சி விஜயபுரம் பைபாஸ் சாலையில் நடைபெற்ற முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, உடனடியாகத் தீா்வுகாணப்பட்ட மனுக்கள் தொடா்பாக, 2 பயனாளிகளுக்கு நகராட்சி சொத்து வரி பெயா் மாற்றத்துக்கான ஆணையை வழங்கினா்.
இதேபோல், நன்னிலம் ஒன்றியம் குருங்குளம் ஊராட்சி மந்தகரை மாரியம்மன் கோயிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டு, சுகாதாரத் துறை சாா்பில் 2 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், வருவாய்த் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ஜாதிச் சான்றிதழும், வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்களும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகளையும் வழங்கினாா்.
முகாமில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்யா, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், பணி நியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அமுதா, வட்டாட்சியா்கள் ராமச்சந்திரன் (நன்னிலம்), ஸ்டாலின் (திருவாரூா்) உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.