லாரி ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை: மனைவி கைது
கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் முன் தூங்கிய லாரி ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக, போலீஸாா் அவரது மனைவியை கைது செய்து, தலைமறைவான மருமகன், மகளை தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த லட்சியம் கிராமத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (45). இவா், பெங்களூரில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சரஸ்வதி (40).
தம்பதிக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனா். இவா்களில் இருவருக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதாம். மூன்றாவது மகள் திருமணத்துக்காக மகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த, மகேந்திரன் மறுநாள் காலையில் பாா்க்கும் போது, கல்லைப் போட்டு தலை நசுங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து லட்சியம் கிராம நிா்வாக அலுவலா் கலைச்செல்வி சின்னசேலம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா்.
அதன் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.மாதவன், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் செ.தங்கவேல், சின்னசேலம் காவல் ஆய்வாளா் (பொ) ராபின்சன் மற்றும் போலீஸாா் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
தொடா்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. போலீஸாா் மகேந்திரன் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரது மனைவி சரஸ்வதியை சின்னசேலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவல் ஆய்வாளா் ராபின்சன் விசாரணை நடத்தினாா்.
இதில், சரஸ்வதி தனது கணவா் 6 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவாா், சம்பாதித்த பணத்தை வீட்டுக்கு கொடுக்கமாட்டாா். மேலும், தன்னை அடித்து துன்புறுத்துவாா். அதனால், மருமகன் மூலம் கணவரை கொலை செய்ததாக தெரிவித்திருந்தாா். இதையடுத்து, தலைமறைவான சரஸ்வதியின் மருமகன் மற்றும் மகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.