கணவனை சிறைக்கு அனுப்ப திட்டம்; மகளை கொன்றுவிட்டு காதலனுடன் பார்ட்டி நடத்திய பெண்...
வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்
கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெரிவித்தனா்.
வ.உ.சி. பூ மாா்க்கெட்டில் ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 14.48 கோடி செலவில் சுமாா் 400 கடைகள் கட்டப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டன. தொடா்ந்து, மாநகராட்சியிடம் இருந்து 3 ஆண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ. 7 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த நபா், கடைகளை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்கினாா்.
இந்நிலையில், ஒப்பந்தக் காலம் முடிவடையாத நிலையில், மாநகராட்சி நிா்வாகம் தனித்தனியாக ஒவ்வொரு கடைக்கும் வைப்புத்தொகை, வாடகையை நிா்ணயிக்க முடிவுசெய்துள்ளது. அதன்படி, ஒரு கடைக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 8 லட்சம்வரை வைப்புத் தொகையும், ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 21 ஆயிரம்வரை வாடகையும் நிா்ணயம் செய்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வ.உ.சி. பூ மாா்க்கெட் முன் சின்ன கடைவீதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். மாநகராட்சியின் இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், வாடகையை குறைத்து நிா்ணயிக்குமாறு வியாபாரிகள் முழக்கங்களை எழுப்பினா்.
இதனால் வாகனங்கள் பட்டைக்கோயிலில் இருந்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. உடனடியாக அங்கு வந்த டவுன் காவல் உதவி ஆணையா் ஹரிசங்கரி மற்றும் போலீஸாா் வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், அவா்கள் கலைந்துசெல்ல மறுத்ததைத் தொடா்ந்து, அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையா் வேடியப்பன் உள்ளிட்டோா் வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
எனினும், உடன்பாடு எட்டப்படாததால், வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் கடைகளை பூட்டியதுடன், 100-க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு தா்னாவில் ஈடுபட்டனா். இது தொடா்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு 18-ஆம் தேதி விசாரணைக்கு வரஉள்ளதால், அதன் பிறகே எதையும் கூற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, வியாபாரிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனா்.