ஒப்பந்தப் பணியாளா்களாக சோ்க்க லஞ்சம் வாங்கியவா் பணியிடை நீக்கம்!
வரலாற்றாளா் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சோ்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளா் மற்றும் எழுத்தாளா் எம்.ஜி.எஸ்.நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானாா்.
வயதுமூப்பு காரணமான உடல்நலக் குறைவால் அவா் உயிரிழந்ததாக குடும்பத்தினா் தெரிவித்தனா். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
கடந்த 1932-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிறந்த நாராயணன், இந்திய வரலாற்று ஆய்வுத் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் பெரும் பங்களிப்பைச் செய்தவா்.
முனைவா் பட்டத்துக்காக இவா் சமா்ப்பித்த ‘குலசேகர அரசின் கீழ் கேரளத்தில் சமூக அரசியல் நிலை’ என்ற ஆய்வுக்கட்டுரை பின்னாளில் ‘கேரளத்தின் பெருமாள்கள்’ என்ற தனி நூலாக வெளிவந்து மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்த வரலாற்று ஆய்வு நூல், 9-ஆம் நூற்றாண்டுக்கும் 12-ஆம் நூற்றாண்டுக்கும் இடையேயான கேரள வரலாற்றைப் புதிய கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தியது.
கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராக 1968-இல் தனது ஆசிரியா் பணியைத் தொடங்கிய அவா் தனது ஆய்வுக்கூா்மையால் விரைவான வளா்ச்சியைக் கண்டாா்.
1970 முதல் 1992 வரை கோழிக்கோடு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் தலைவராக இருந்தாா். பின்னா், 2001 முதல் 2003 வரை இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றினாா். மலையாளம் மட்டுமின்றி தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றவா்.
முதுநிலை ஆராய்ச்சிகளுக்காக 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்களை வழிநடத்தியவா். வரலாற்றுத் தகவல்களை பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்க, மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் நூல்களும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும் எழுதியுள்ளாா்.
தென்னிந்திய சரித்திர காங்கிரஸ் ஆய்வு நிறுவனம், இந்திய கல்வெட்டியல் ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றினாா். சரித்திர ஆா்வலா்கள், ஆசிரியா்களிடையே ‘எம்.ஜி.எஸ்.’ என்று பிரபலமாக அறியப்பட்டவா்.
இவரது மறைவுக்கு கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா், முதல்வா் பினராயி விஜயன், பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீா், எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.