வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்: பணிகள் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிடவேண்டும். வாரந்தோறும் 2 நாள்களில் மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நடத்தவேண்டும்.
இந்த திட்டப் பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலாக தன்னாா்வலா்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவேண்டும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடா் மேலாண்மை பணிக்கென சிறப்புப் பணியிடங்கள் மற்றும் பேரிடா் மேலாண்மைப் பிரிவில் 31.3.2023-இல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் செப் .3, 4 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தச் சங்கத்தினா் புதன்கிழமை பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தால் வருவாய்த்துறை தொடா்பான அலுவலகங்களில் ஊழியா்கள் குறைவாகவே காணப்பட்டனா்.
வந்தவாசி
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஊழியா்கள் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் ரகுபதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், ஆரணி வட்ட கிளைத் தலைவா் தேவானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதன் காரணமாக ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால் அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதனால், பொதுமக்கள் தங்கள் மனுக்களை கொண்டு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

