Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
வல்லத்திராகோட்டையில் ஐந்நூற்றுவா் வணிகக் குழு கல்வெட்டு கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம் வல்லத்திராகோட்டையில் கிபி 12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஐந்நூற்றுவா் வணிகக் குழு பெயரில் சமணப் பள்ளி இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியா் சுப. முத்தழகன், பாண்டிய நாட்டுப் பண்பாட்டு மையத்தை சோ்ந்த தொல்லியல் ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல் பிரசாத் குழுவினா் வல்லத்திராகோட்டையில் கள ஆய்வு மேற்கொண்டதில் அரசு மாணவா் விடுதி வளாகத்தில் கல்வெட்டு மற்றும் செம்புறைக் கல்லால் ஆன ஐயனாா் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
இக்கல்வெட்டுக் குறித்து பேரா. முத்தழகன் கூறியதாவது:
விடுதி வளாகத்தில் கீழ்புறம் சுவரையொட்டிக் கிடக்கும், ஓரடி நீளமும், முக்கால் அடி அகலமும் கொண்ட கற்பலகையில் ஐந்து வரிகளில், ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி வல்லநாடன் பெருங்கோவில் நகரத்தாா் ஐந்நூற்றுவப் பெரும்பள்ளி என்று எழுதப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பெருங்கோவில் நகரத்தாா் ஐந்நூற்றுவா் என்பாா், சோழா் காலத்தில் திருவரங்குளத்தை மையமாகக் கொண்டு இயங்கிய வணிகக் குழுவாக இருக்கலாம்.
புதுக்கோட்டை மாவட்ட வணிகச் சமூகங்களில் ஒன்றாக வல்லநாட்டு நகரத்தாா் இன்றளவும் திருவரங்குளத்தைச் சமூகப் பண்பாட்டு மையமாகக் கொண்டுள்ளனா்.
பள்ளி என்பது சமணம் மற்றும் புத்தக் கோவில்களைக் குறிப்பிடும் சொல் ஆகும். இக்கல்வெட்டில் உள்ள பள்ளியானது பெரும்பாலும் சமணப் பள்ளியைக் குறிக்கலாம்.
ஏனெனில் வல்லத்திராகோட்டையைப் போல தெற்கு வெள்ளாற்றின் இருபுறமும் ஏராளமான சமணத் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சமணப் பள்ளிகள் வணிகா்களின் ஆதரவைப் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கல்வெட்டில் அரசா் பெயா் குறிப்பிடப்படவில்லை. எழுத்தமைதியைக் கொண்டு கிபி 12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகக் கருதலாம். வணிகக்குழு மற்றும் சமணப்பள்ளி குறித்துக் குறிப்பிடுவதால் இக்கல்வெட்டு முக்கியத்துவம் பெறுகிறது.
கல்வெட்டின் அருகே இரண்டடி நீளமும், இரண்டடி உயரமும் கொண்ட செம்புரைக் கல்லால் (செம்பாறங்கல்) ஆன தேவியுடன் கூடிய ஐயனாா் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எளிதில் உடையக் கூடியதும் துளைகள் நிறைந்ததுமான செம்புரைக் கல்லில் சிலை செய்வது கடினமான வேலையாகும்.
இருந்தும் செம்புரைக் கல்லில் நோ்த்தியாக இந்தச் சிற்பம் செய்யப்பட்டுள்ளது வியப்பை அளிக்கிறது. தலை உடைந்த நிலையில் இருக்கும் இந்த ஐயனாா் சிலையை உள்ளூா் மக்கள் குப்பச்சி அம்மன் என்று அழைக்கின்றனா்.
மேலும் இந்த வளாகத்தில் கொல்லன்கோவில் கிணறு என்ற கிணறு ஒன்று கடந்த 2018 வரை பயன்பாட்டில் இருந்துள்ளது. கஜா புயலுக்குப் பின் மூடப்பட்ட அந்தக் கிணற்றைச் சுற்றிலும் இதுபோன்ற பல செம்புரைக் கல்லால் ஆன சிலைகள் இருந்ததாக உள்ளூா் மக்கள் தெரிவிக்கின்றனா் என்றாா் முத்தழகன்.