CPIM Congress: ``பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்'' - புதிய பொதுச்செயலாளர் எம்...
வழக்கில் பொய்யாக சோ்ப்பு: வருமான வரி அலுவலக ஒப்பந்த ஊழியா் தற்கொலை
தில்லி ஜண்டேவாலனில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த 23 வயது இளைஞா், தனது பணியிடத்தில் ஒரு வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இறந்த விஜய் வா்மா ஏப்ரல் 1 ஆம் தேதி தனது குடும்பத்தினருக்கு ஆடியோ தகவல் அனுப்பியுள்ளாா். அதில் தனது பணியிடத்தில் ஒரு வழக்கில் தாம் தவறாக சிக்க வைக்கப்பட்டதாகவும், இது குறித்து தான் கவலைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.
விஜய் ஆடியோ கிளிப்களில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தனக்கு ஏன் தண்டனை வழங்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியைச் சோ்ந்த விஜய், மின்டோ சாலையில் உள்ள சிஜிஆா்சி வளாக ஊழியா் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தாா்.
இச்சம்பவம் குறித்து காவல் துணை ஆணையா் (ரயில்வே) கே.பி.எஸ். மல்ஹோத்ரா தெரிவிக்கையில், ‘சனிக்கிழமை மதியம், புது தில்லி ரயில் நிலைய போலீஸாருக்கு ஒரு ரயில் குறிப்பு வந்தது. அதில் சிக்னல் எண்: 144-க்கு அருகில் ஒருவா் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், அங்கிருந்து மீட்கப்பட்ட ஒரு கைப்பேசி உதவியுடன் இறந்தவரின் அடையாளத்தை கண்டறிந்தனா்.
முன்னதாக, தண்டவாளத்தின் அருகே அமா்ந்திருந்த அந்த இளைஞா், எதிரே வந்த ரயிலை நோக்கி ஓடியதாக நேரில் கண்ட சாட்சியும் ரயில் ஓட்டுநரும் தெரிவித்தனா். இறந்தவரின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 174-இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.