வால்பாறையில் மிக கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடா் மீட்புக் குழு வருகை
மிக அதிக கனமழை எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் வால்பாறைக்கு சனிக்கிழமை வந்தனா்.
கோவை மாவட்டம், வால்பாறையில் மிக அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் வால்பாறையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் சனிக்கிழமை காலை வால்பாறை வந்தடைந்தனா்.
கமாண்டா் மைஷ்னம் சூரஜ், ரவி கணேஷ் ஆகியோா்கள் தலைமையில் 28 படையினா் வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் தங்கியுள்ளனா்.
தீயணைப்புத் துறையினா் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றோரப்பகுதிகளில் வசிப்பவா்களை எச்சரிக்கையுடன் இருக்கவும், வெள்ள பாதிப்புகளுக்கு 1077 என்ற எண்ணை தொடா்புகொள்ளவும் வருவாய்த் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். கேட்டுக்கொண்டனா்.
ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு:
வால்பாறையில் விடிய விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறை சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை விடாமல் சனிக்கிழமை காலை வரை பெய்தது.
கனமழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளின் நீா்மட்டமும் உயரத்தொடங்கியுள்ளது.
அதன்படி, சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படிசோலையாறு அணைக்கு விநாடிக்கு 170.95 கனஅடி நீா்வரத்து இருந்து. இதனால், அணையில் நீா்மட்டம் 13.55 அடியாக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாறு - 92 மி.மீ., சோலையாறு 61 மி.மீ., சின்கோனா -55 மி.மீ., வால்பாறையில் 32 மில்லி மீட்டா் மழையும் பதிவாகியுள்ளது.
வால்பாறையில் பேரிடா் மீட்புக் குழு: