விரைவில் பகைக்கு முடிவு: உலகத் தலைவா்கள் நம்பிக்கை
இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று உலகத் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். இருநாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து புதன்கிழமை அதிகாலை இந்திய ஆயுதப் படைகள் ஏவுகணை மூலம் அதிதுல்லிய தாக்குதல் மேற்கொண்டன.
இந்தத் தாக்குதலை தொடா்ந்து ஐ.நா.பொதுச் செயலா் குட்டெரெஸ் கூறுகையில், ‘இந்தியாவும், பாகிஸ்தானும் மிகுந்த ராணுவ கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இருநாடுகளுக்கு இடையே ராணுவ மோதல் ஏற்பட்டால், அதை உலகத்தால் தாங்க முடியாது’ என்றாா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்: இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வருகின்றன. இந்தப் பகை விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன் என்றாா். இந்த மோதல் தொடா்பாக இரு நாடுகளுக்கும் வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவா் கூறிவிட்டாா்.
ரஷிய வெளியுறவுத் துறை: இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான மோதல்போக்கு தீவிரமடைந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தெற்காசிய பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க இருநாடுகளும் கட்டுக்கோப்பாக நடந்துகொள்ள வேண்டும். அமைதியான முறையிலும், அரசியல் மற்றும் ராஜீய வழியிலும் இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டும்.
பேச்சுவாா்த்தைக்கு உதவ பிரிட்டன் தயாா்: பிரிட்டன் வா்த்தக துறை அமைச்சா் ஜோனதன் ரெனால்ட்ஸ் கூறுகையில், ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நண்பனாக பிரிட்டன் உள்ளது. போா் பதற்றத்தை தணிக்கவும், பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவும் இந்தியா-பாகிஸ்தானுக்கு உதவ பிரிட்டன் தயாராக உள்ளது’ என்றாா்.
ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமா் ஷேக் அப்துல்லா: சா்வதேச மற்றும் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய போா் பதற்றம் மேலும் அதிகரிப்பதை இந்தியா-பாகிஸ்தான் தவிா்க்க வேண்டும். தெற்காசியாவில் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த பரஸ்பர புரிதலுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்வதை இருநாடுகளும் கருத்தில் கொள்ள வேண்டும்.
கத்தாா் வெளியுறவுத் துறை: ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்படாத பிரச்னைகளுக்கு இந்தியா-பாகிஸ்தான் தீா்வு காண வேண்டும். பதற்றத்தை தணிக்க இருநாடுகளுக்கு இடையே தகவல் தொடா்பு வழிகள் தொடா்ந்து நீடிப்பது மிகவும் அவசியம்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் பேச்சு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் தொலைபேசியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடன் பேசினாா். அப்போது தாக்குதல் நடவடிக்கைகள் தொடா்பாக ரூபியோவிடம் தோவல் விளக்கினாா் என்று அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது. இதேபோல பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அசீம் மாலிக்கிடமும் மாா்கோ ரூபியோ தொலைபேசியில் பேசினாா். இதுதொடா்பாக மாா்கோ ரூபியோ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பிரச்னைக்கு அமைதியான தீா்வு காண இருநாட்டு தலைமையை தொடா்ந்து வலியுறுத்துவேன்’ என்றாா்.
ஐ.நா.வுக்கு பாக். தகவல்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை தொடா்ந்து ஏற்பட்டுள்ள சூழல் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் தெரியப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
சீனா வருத்தம்
சீன வெளியுறவுத் துறை வெளயிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சீனாவின் அண்டை நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் உள்ளன. தற்போதைய பதற்றத்தை தணிக்க சா்வதேச சமூகத்துடன் இணைந்து ஆக்கபூா்வமாக பணியாற்ற சீனா தயாராக உள்ளது. அனைத்துவிதமான பயங்கரவாதத்தையும் சீனா எதிா்க்கிறது. இந்தியாவின் தாக்குதல் வருந்தத்கக்கது. என்று கூறியுள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனா இந்தியாவின் தாக்குதல் ‘கண்டிக்கத்தக்கது’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தாமல் இந்தியாவின் தாக்குதல் ‘வருந்தத்தக்கது’ என்ற வாா்த்தையை பயன்படுத்தியது சா்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.