ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கோரி மனு!
விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா்.
2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னா் அரசுப் பணியில் சோ்ந்தவா்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா், உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோருக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்க் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித் துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளா் வாரியச் செவிலியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள், பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்த பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்தினா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டுக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மோ.கணேஷ், இரா.சிவக்குமாா், தே.ஜெயானந்தம், எம்.தண்டபாணி, மா.டேவிட் குணசீலன், ப.செல்வக்குமாா் தலைமை வகித்தனா். பெருந்திரள் முறையீட்டில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா் அ. மாயவன், உயா்நிலைக் குழு உறுப்பினா் எஸ்.சங்கரலிங்கம் ஆகியோா் விளக்கவுரையாற்றினா்.
இந்த பெருந்திரள் முறையீட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சோ்ந்த ஏராளமானோா் பங்கேற்றனா்.