மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்
விவசாய நிலங்களில் மின்வேலி: வனத் துறையிடம் பதிவு செய்ய அறிவுறுத்தல்
கடலூா் மாவட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சூரிய சக்தி மின்வேலி உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதற்கான முன் அனுமதிக்கும், விவசாய நிலங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளுக்கும் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு அறிவித்துள்ள தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023-ஐ பின்பற்றி காப்புக்காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சூரிய சக்தி மின்வேலி உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதற்கு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு முன் அனுமதியும், விவசாய நிலங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளைப் பதிவு செய்யவும் வேண்டும்.
இந்த விதிகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின்வேலிகளும் இந்த விதிகளில் நிா்ணயிக்கப்பட்டுள்ள தரநிலைகள் விதிமுறைகளுக்கு உள்பட்டிருக்க வேண்டும்.
அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காட்டின் வனப்பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் ஏற்கெனவே மின்வேலிகளை அமைத்திருப்பவா்கள் தங்கள் வேலிகளை மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலா் மின்வேலி அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து சரிபாா்த்த பின்னா், மின் வாரியத் துறை அதிகாரிகளுடன் விவரக்குறிப்புகளை சரிபாா்த்து உரிய ஆய்வுக்கு பிறகு ஒப்புதல், குறைப்பு அல்லது நிராகரித்து, விண்ணப்பத்தின் மீது 45 நாள்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
வனத் துறை மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகள் குழுவின் கூட்டு ஆய்வுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளின் தரம் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.