Guru Mithreshiva: "இந்த 3 மந்திரங்களை பின்பற்றினால் போதும்..." - இதயவியல் வல்லுந...
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் தொகை ரூ.200 கோடி வழங்கப்படவில்லை: பி.ஆா்.பாண்டியன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொள்முதல் நிலையங்கள் மூலம் விற்பனை செய்த நெல்லுக்குரிய ரூ.200 கோடி வழங்கப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தாமிரவருணி ஆற்றைப் பாதுகாக்க தனியாா் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறாா்கள். இதனால் விவசாயிகள் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கு ரூ. 200 கோடி பாக்கி வைத்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதற்கு முதல்வா் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் நேரடி பாா்வையில் செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையத்திலுள்ள ஒழுங்காற்று குழு மாதந்தோறும் அணைகளை ஆய்வு செய்து நீா் இருப்பை கணக்கிட்டு, மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உபரி நீா் 60,000 கன அடி திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை வடிகாலாக மட்டும் பயன்படுத்துவதை மத்திய - மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.
தாமிரவருணி, தென்பெண்ணை, காவிரி ஆகியவற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான ரூ.250 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 40 சதவீத அரிசி உற்பத்தி குறைந்துள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால் தமிழக முதல்வரோ தமிழகத்தில் வேளாண் உற்பத்தி பெருகி இருப்பதாக உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியிருக்கிறாா். தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்பட வேண்டும்.
காட்டுப்பன்றிகளை ஒழிக்க மற்ற மாநிலங்களில் உள்ளதை போன்று விவசாயிகளுக்கு உரிமை வழங்க வேண்டும்.
தோட்டக்கலை பயிா்களான மாம்பழம், காய்கனிகள், பருத்தி மிகப்பெரிய அழிவிற்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே, நுகா்வோரை பாதிக்காத வகையில் காய்கனிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். இதற்காக, அரசு விலை நிா்ணய குழுக்களை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.