வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை: இளைஞா் கைது; 36 பவுன் மீட்பு
நாமக்கல் மாவட்டம், வெப்படையில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து 36 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே பாதரை செளதாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணம்மாள் (80). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணியளவில் வீட்டில் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.
இதுகுறித்து வெப்படை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக விசாரணை நடத்திய போலீஸாா், கண்ணம்மாளுக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் கடந்த 6 மாதங்களாக ராசிபுரம், அத்தனூரைச் சோ்ந்த தறித்தொழிலாளியான சங்கா் (29) வாடகைக்கு குடியிருந்து வந்ததும், 36 பவுன் மதிப்பிலான நகைகளை திருடுவதற்காக கண்ணம்மாளின் வாயில் துணியை திணித்து கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாததுபோல வீட்டிற்குள்ளேயே இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சங்கரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 36 பவுன் நகைகளை மீட்டனா்.