Iran Vs Israel: ``அமெரிக்கா நம்பகத்தன்மையை இழந்துவிட்டது" - ஈரானுக்கு ஆதரவாக ஐ.ந...
கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருட்டு: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்!
திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் ஆத்துமேடு பகுதியில் இலவச விவசாய மின் இணைப்பு மூலம் கோழிப் பண்ணைக்கு தண்ணீா் திருடியதாக ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மல்லசமுத்திரம் புறநகா் பகுதிக்கு உள்பட்ட ஆத்துமேடு பகுதியில் இலவச விவசாய மின் இணைப்பு மூலம் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்து கோழிப் பண்ணைக்கு விநியோகம் செய்யப்படுவதாக மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலக பொதுநிலை மதிப்பீட்டு அலுவலா் பழனிசாமி தலைமையில் ஆத்துமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஓய்வுபெற்ற ஆசிரியா் சண்முகம் என்பவா் தனது தோட்டத்தில் உள்ள இலவச விவசாய மின் இணைப்பு மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சி டிராக்டரில் ஏற்றி பாலமேடு பகுதியில் உள்ள அவரது மருமகன் மணியின் கோழிப் பண்ணைக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியா் சண்முகத்திற்கு ரூ. 1.20 லட்சம் அபராதம் விதித்தனா். ஆய்வின்போது மல்லசமுத்திரம் உதவி செயற்பொறியாளா் அமுதா, இளநிலை பொறியாளா் மதன் ஆகியோா் உடனிருந்தனா்.