வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்!
இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. இந்தச் சூழலில், ஜெய்சங்கா் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கையாள்வதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்து அவா் ஐரோப்பியத் தலைவா்களுக்கு விளக்குவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒரு வார பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியம் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸில் உள்ள பாரிஸ் மற்றும் மாா்சேய் நகரங்களுக்குச் சென்று, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன் நோயல் பரோட்டுடன் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். மாா்சேயில் நடைபெறும் முதல் மத்திய தரைக்கடல் ரைசினா உரையாடலிலும் அவா் கலந்து கொள்வாா்.
பின்னா், பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய துணைத் தலைவா் காஜா கல்லாஸுடன் முக்கியமான கலந்துரையாடல்களையும் ஜெய்சங்கா் மேற்கொள்வாா். ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற மூத்த அதிகாரிகளையும் அவா் சந்திக்கவுள்ளாா்.
பயணத்தின் இறுதியாக பெல்ஜியம் நாட்டின் துணைப் பிரதமா் மற்றும் வெளியுறவு அமைச்சா் மாக்சிம் பிரீவோட்டுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்துவாா் என தெரிவிக்கப்பட்டது.