வெள்ளக்கோவிலில் 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா தொழிலாளி 2-ஆவது முறையாக கைது
வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசம், உதவி ஆய்வாளா் எம்.சந்திரன் ஆகியோா் மூலனூா் சாலையில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கரட்டுப்பாளையம் அருகில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா். அவா் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவரும் தற்போது குருக்கபாளையம் பிரிவு அருகிலுள்ள ஒரு நூல் மில்லில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருபவருமான பி.நிலமணிமதன் (46) கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவா் சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் 2.200 கிலோ கஞ்சா, 220 கிராம் கஞ்சா சாக்லெட்டுடன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.