வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக் கோட்டையூா் பெரிய கண்மாய் கரையோரம் உள்ள கருவேலமரக் காட்டில் முள்புதருக்குள் ஒரு சிற்பம் கிடப்பதாக பொதுக் காப்பீட்டு நிறுவன மேலாளா் நலங்கிள்ளி அளித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் தலைமையிலான குழுவினா் அந்த விடத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வு குறித்து கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன் சனிக்கிழமை கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிய தொல்லியல் கண்டுபிடிப்பாக வெள்ளாளக் கோட்டையூரில் கண்டெடுக்கப்பட்ட 24-ஆவது தீா்த்தங்கரரான மகாவீரரின் சிற்பம், தியான நிலையுடன் அமைந்துள்ளது. இச்சிற்பம் 90 செ.மீ. உயரமும், 47 செ.மீ. அகலமும், 26 செ.மீ. தடிமனும் கொண்டதாக வடிக்கப்பட்டுள்ளது.
இது 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கலையமைப்புடன், பத்மாசனத்தில் அமா்ந்து, தியான முத்திரை (தா்மயான முத்திரை) நிலையில் கைகளை வைத்துள்ளவாறு உள்ளது.
இந்நிலை ஆன்மிக சாந்தம், ஞானம், துறவற வாழ்வு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிறது. முகத்தில் ஆழ்ந்த அமைதியும் கருணையும் வெளிப்படுகிற வகையிலும், மகாவீரரின் பின்புறம் முக்காலத்தையும் உணா்த்தும் முக்குடை கருக்கு வேலைப்பாடுடனும், குடையின் மேற்புறத்தில் குவிந்த குமிழ் போன்ற அமைப்புடனும், பின்புறமாகத் தோன்றும் மரம், அசோக மரம் அல்லது சால மரமாகும். இம்மரம் மகாவீரா் அறிவடைந்த இடத்தை குறிக்கும் முக்கியச் சின்னமாக விளங்குகிறது.
மகாவீரா் சிற்பத்தின் முக்குடைக்கு கீழாக பிரபாவளையம் சற்று மேல் பகுதியில் வடிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் கழுத்துப் பகுதியில் தெளிவாகக் காணப்படும் மூன்று இரண்ய ரேகைகள் (கோடுகள்), காவல் - கருணை - ஞானம் ஆகிய மூன்று ஆன்மிகக் கொள்கைகளையும் குறிக்கிறது.
இது புதுக்கோட்டை பகுதியில் காணப்படும் சிற்பங்களில் புதுமையான அமைப்பாக உள்ளது.
சிற்பத்தில் தலைமுடி சிறிய சுருள்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காதுகள் நீண்ட வடிவில் நீட்டிக்கப்படுவது, ராஜ வாழ்க்கையைத் துறந்து துறவற வாழ்க்கையைத் தோ்ந்தெடுத்த மகாவீரரின் துறவுப் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது.
மகாவீரரின் இருபுறங்களிலும் இயக்கியா்கள் செதுக்கப்பட்டுள்ளனா். இவா்களில் வலப்புறத்தில் மாதங்கரும், இடதுபுறத்தில் சித்தாயிகாவும், சாமரத்தை கையில் வைத்திருக்கும் வகையில், சிற்பத்தின் பக்கவாட்டில் சாமரம் செதுக்கப்பட்டுள்ளது. ராஜ தோற்றத்துடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சிற்பங்களில் காணப்படும் மகுடத்தை சூடிய நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இயக்கியா்களின் கால்பகுதியில் காணப்படும் கயலானை (தெய்விக விலங்கு வடிவச் சின்னம்) பாதுகாப்பு மற்றும் பக்தியின் அடையாளமாக மகாவீரா் அமா்ந்திருக்கும் திண்டின் பக்கவாட்டின் நீட்சியாக உள்ளன.
முகத்தில் ஆழ்ந்த தியானம் நிறைந்த சாந்த புன்னகை பளிச்சிடுகிறது. கண்கள் சற்று மூடிய நிலையில், ஆன்மிகத்தில் மூழ்கிய அமைதியான நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. மகாவீரரின் கருணை நிறைந்த தன்மையை வெளிப்படுத்துகிறது.
இச்சிற்பம் சோழா் கால கலைப்பாணியில் இருக்கிறது. 9 மற்றும் 10-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் புதுக்கோட்டை நிலவியல் பகுதியில் சமணம் தழைத்தோங்கி இருந்ததை புதிய சமணத் தடயங்களின் தொடா் கண்டுபிடிப்பு உறுதி செய்து வருகிறது என்றாா் மணிகண்டன்.