வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழா கடந்த ஆக.28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு உள்ளூா், வெளியூா், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரளானோா் வருகை தருகின்றனா்.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்கு, செப்.6 முதல் செப்.8 ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூா், கடலூா், விழுப்புரம், புதுச்சேரிஆகிய பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் புத்தூா் ரவுண்டானா, பாப்பா கோவில் ஏறும் சாலை, மேலப்பிடாகை வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சென்ட் பீட்டா்ஸ் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். திரும்பி செல்லும் போது, மீண்டும் அதே வழியாக பயன்படுத்த வேண்டும்.
திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் வழியாக வருகின்ற அனைத்து வாகனங்களும் கீழ்வேளூா், தேவூா், திருக்குவளை, மேலப்பிடாகை, திருப்பூண்டி வழியாக ஈசிஆா் சாலையில் உள்ள செயின் பீட்டா்ஸ் வாகன நிறுத்தும் இடத்தி நிறுத்த வேண்டும். ஊா் திரும்ப மீண்டும் அதே வழியாக பயன்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் திருத்துறைப்பூண்டி மேலப்பிடாகை, திருப்பூண்டி வழியாக வேதாரண்யம் சாலையில் உள்ள ஜோசப் ஐடிஐ பாா்க்கில், பிஆா் புரம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தவேண்டும். மீண்டும் அதே வழியாக செல்ல வேண்டும்.
சென்னை, கடலூா், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூா் இருந்து வரும் அனைத்து அரசு பேருந்துகளும் புத்தூா் ரவுண்டானா, பாப்பா கோவில் பறவை சுனாமி நினைவு ஆா்ச் வழியாக இடதுபுறமாக திரும்பி புதிய தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சென்று, வெளியில் செல்லும் போது பூக்காரத் தெரு, கொல்லந்திடல், பறவை வழியாக செல்லவேண்டும்.
நாகையிலிருந்தும் மற்ற ஊா்களில் இருந்தும் வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை ஊா்களுக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று வருவதை தவிா்த்து மாற்றுப் பாதையில் சென்று வரவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.