பாமக: நூலிழையில் உயிர் தப்பிய ம.க.ஸ்டாலின்; காரில் தப்பிய 8 பேர்; 5 முறை போனில் பேசிய ராமதாஸ்
கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேலமருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகிக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ம.க.ஸ்டாலின் நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்திருந்தார்.
அலுவலக வளாகத்திற்குள் அவரது ஆதரவாளர்களான களம்பரத்தைச் சேர்ந்த இளையராஜா (44), மஞ்சமல்லியைச் சேர்ந்த அருண் (25) உள்ளிட்ட சிலரும் இருந்தனர்.

மதியம் சுமார் 12.30 மணியளவில் கார் ஒன்றில் 8 பேர் வந்துள்ளனர். இதில், டிரைவர் மட்டும் காரிலேயே அமர்ந்திருக்க மற்ற 7 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் முகமூடி அணிந்து அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளனர்.
கைகளில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து போர்டிகோவில் நாட்டு வெடிகுண்டை வீசியவர்கள், அதன் பின்னர் மற்றொரு வெடி குண்டை அலுவலகத்திற்குள் வீசினர்.
இதில் நாற்காலி மற்றும் கண்ணாடி சேதமடைந்தன. மேலும் வீசப்பட்ட 2 குண்டுகள் வெடிக்காமல் அந்த இடத்தில் கிடந்தன.
அலுவலகத்தில் நுழைந்த மர்ம நபர்களை இளையராஜா மற்றும் அருண் ஆகியோர் தடுத்துள்ளனர். அப்போது இரண்டு பேரையும் கையில் அரிவாளால் வெட்டிவிட்டு உள்ளே சென்றனர்.
இதற்கிடையில், விபரீதம் நடக்கிறது என்பதை அறிந்த ம.க.ஸ்டாலின் தனது அறையில் உள்ள கழிவறைக்குள் சென்று மறைந்து கொண்டார். கொலை செய்ய வந்தவர்கள், ம.க.ஸ்டாலின் சீட்டில் இல்லை என்றதும் பின்புறம் வரை சென்று தேடியுள்ளனர்.
அவர் இல்லை என அறிந்து அதே காரில் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர். ஐந்து நிமிடம் நடந்த இந்தச் சம்பவம் சினிமா காட்சிகளை விஞ்சும் வகையில் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

இதையறிந்து, ம.க.ஸ்டாலின் ஆதவர்வாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டயர்களைக் கொளுத்தி சாலை நடுவே எரிய விட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ம.க.ஸ்டாலினைக் கொலை செய்ய முயன்றவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர்.
இதனால் ஆடுதுறை, கும்பகோணம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. இதையடுத்து எஸ்.பி., ராஜாராம் தலைமையில், ஆடுதுறை அலுவலகத்திற்குள் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சாவூரிலிருந்து வரவழைக்கப்பட்ட வெடி குண்டு நிபுணரான எஸ்.ஐ., ராஜ்குமார் தலைமையிலான போலீஸார் வெடித்த மற்றும் வெடிக்காத குண்டுகளைக் கைப்பற்றி தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், தஞ்சாவூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது சோதனை செய்யப்பட்டது.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகள் மூலம் அந்தக் காரில் எந்தச் சாலையில் தப்பிச் சென்றனர் என்பதையும் ஆய்வு செய்தனர். தற்போது, ம.க.ஸ்டாலின் ராமதாஸ் அணியில் இருக்கிறார்.
நாளை, கும்பகோணத்தில் ராமதாஸ் மகள், பாமக நிர்வாகக் குழு உறுப்பினரான ப.ஸ்ரீகாந்தி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆடுதுறை பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த ம.க.ஸ்டாலின் தம்பி ராஜா திருவிடைமருதூர் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். ராஜா, கொலை செய்யப்பட்டதற்குப் பழிக்குப் பழியாகக் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோவை சிறையிலிருந்து வெளியே வந்த கொலையாளிகளைக் கொலை செய்வதற்கு அவரது ஆதரவாளர்கள் சென்றனர்.
இதையறிந்த கொலையாளிகள் தப்பித்து விட்டனர். அப்போது, கொலையில் தொடர்பு இல்லாத 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சூலூர் போலீஸார் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும், ராஜா கொலையில் முக்கிய குற்றவாளியான லாலி மணிகண்டனை, ஜாமீனில் எடுப்பதற்காக அவரது சகோதரர் மகேஷ், பலரிடம் நிதி திரட்டினார். அப்போது, பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளராக இருந்த வெங்கட்ராமன் நிதி வழங்கியதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில், ம.க.ஸ்டாலினுக்குக் கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக வெங்கடராமன் உட்படச் சிலர் கைது செய்யப்பட்டனர். ம.க.ஸ்டாலினுக்கும், பாமக மற்றும் அதே பகுதியில் உள்ள அவரது சமூகத்திற்குள் உள்ள சிலருக்கும் முன்விரோதம் இருக்கிறது.
இதனால் யார் அவரைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டார்கள், எந்த குரூப் வந்தது என்பது விசாரணை முடிவில் தெரிய வரும் என்றனர்.

இதைத்தொடர்ந்து தன் ஆதரவாளர்களைக் கலைந்து செல்ல வலியுறுத்தி ம.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, "காவல்துறையினர் பாரபட்சமின்றி விசாரணை செய்து வருகின்றனர். டாக்டர் ராமதாஸ் அய்யா 5 முறை போனில் என்னிடம் பேசி விட்டார்.
காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் பேசியிருக்கிறார். இரவுக்குள் நல்ல முடிவு கிடைக்கும். நாம் போராட்டம் நடத்தும் போது யாரோ வீசுகிற கல் விழுந்து நமக்கு வழக்காகும். எனவே தயவு செய்து எல்லோரும் செல்லுங்கள்" என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "எனக்குப் பல்வேறு வகையில் கொலை மிரட்டல், அச்சுறுதல்கள் இருப்பது போலீஸார் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளாக போலீஸார் எனது வீட்டிற்குப் பாதுகாப்பு வழங்கி வந்தனர்.
தனிப்பட்ட முறையில் எனக்குப் பாதுகாப்புக்கு போலீஸார் கிடையாது. மயிலாடுதுறை தொகுதியில் எம்.பி வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட போது, ஏற்கெனவே வழங்கிய பாதுகாப்பை போலீஸார் திரும்பிப் பெற்று விட்டனர். எனவே, கடந்த ஆண்டு கலெக்டர் மற்றும் போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தேன்.
நீதிமன்றத்தில் மனு அளிக்கக் கூறினார்கள். இரண்டு முறை மனு அளித்தும் இன்னும் உத்தரவு வரவில்லை. திட்டமிட்டு நடந்த இந்தக் கொலை முயற்சியை போலீஸார் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.