'வைகோ Vs மல்லை சத்யா... தகிக்கும் தாயகம்' - பின்னால் இருக்கும் அரசியல் கணக்கு என்ன?
ம.தி.மு.க-வுக்கு போதாத காலமா எனத் தெரியவில்லை. சமீபகாலமாக அந்த கட்சியில் சலசலப்புகளும், சர்ச்சைகளும் தினமும் அரங்கேறிவருகிறது. கடந்த 9.7.2025 அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ம.தி.மு.க நெல்லை மண்டல செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மைக் பிடித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தனது நீண்ட நெடிய அரசியல் பயணம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்.
ஒருமணி நேரத்துக்கு மேல் ஆகியும் வைகோ தனது பேச்சை நிறுத்தவில்லை. அந்நேரம் சில தொண்டர்கள் பாதியிலேயே வெளியேறினர். இதில் பெரும்பாலான இருக்கைகள் காலியாகின. இதில் அதிச்சியடைந்த வைகோ, 'எங்கு செல்கிறீர்கள்.. வந்து அமருங்கள்.. உள்ளே போய் உட்காரப்போகிறீர்களா.. இல்லையா..' என ஆவேசமானார். ஆனால் தொண்டர்கள் கேட்பதற்கு தயாராக இல்லை. இதில் அப்செட்டான வைகோ பாதியிலேயே தனது பேச்சை நிறுத்திவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை மீண்டும் எழுந்தவர், தொண்டர்களை திட்ட தொடங்கிவிட்டார். அவர் மேடையில் ஆவேசமாக கொதித்துக்கொண்டிருந்தபோது நிர்வாகிகள் சிலர் போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தனர். இப்படியாக செயல்வீரர்கள் கூட்டத்தில் நடந்த கூத்துகளையெல்லாம் செய்தியாளர்கள் படம் பிடிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
இதில் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற வைகோ, 'காலி சேர்களை படம் எடுக்க காலிப்பயல்கள்தான் வருவான்.. உனக்கு அறிவு இருக்கா..' என செய்தியாளர்களை பார்த்து கடுமையாக பேசினார். பிறகு, 'கேமராவில் உள்ள பிலிம் ரோல்களை எல்லாம் பிடிங்கி எறியுங்கள்' என்றார், ஆவேசமாக.
இதையடுத்து செய்தியாளர்கள் மீது தொண்டர்கள் சிலர் தாக்குதலை காட்டவிழ்துவிட்டனர். இதில், காயமடைந்த செய்தியாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சூழலில்தான் வைகோ கொடுத்த பேட்டி ஒன்றால் தாயகத்தில் புயல் வீசுகிறது!

ஊடகம் ஒன்றில் பேசிய வைகோ, "சில காலமாகக் கட்சியின் எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இறுக்கமான முகத்துடன்தான் மல்லை சத்யா இருக்கிறார். வெளிநாடுகளுக்கும் செல்லும்போது ம.தி.மு.க-விலிருந்து வருகிறேன் என அவர் சொல்வதில்லை. மாமல்லபுரம் தமிழ்ச் சங்கத் தலைவர் என்றுதான் சொல்கிறார். என்னிடம் சொல்லாமல்தான் அங்கெல்லாம் செல்கிறார்.
விடுதலைப் புலிகள் வரலாற்றில் மாத்தையாவைவிட பிரபாகரனுக்கு விசுவாசமாக யாரேனும் ஒருவர் இருந்தது உண்டா?. ஈழம் அமைந்தால் மாத்தையாவைத்தான் முதலமைச்சராக ஆக்குவேன் என என்கிட்டேயே தலைவர் பிரபாகரன் சொன்னார். அந்த பிரபாகரனைக் கொலை செய்வதற்கே, இந்திய ரா உளவுத்துறை அமைப்பு மாத்தையாவையும், கிருபனையும் மற்றவர்களையும் கைப்பற்றிக் கொண்டது. அந்த திட்டத்துடன்தான் அவர்கள் இருந்தனர். அது பொட்டம்மானால் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பேரையும் வைத்து பிரபாகரன் கூட்டம் நடத்தினார். அதில், 'தலைவர் பிரபாகரனைக் கொலை செய்ய வேண்டும் என்ற அந்த சதித் திட்டத்துக்கு நான் உடன்பட்டது உண்மைதான்' என்று மாத்தையா அழுதுகொண்டே சொன்னார். அப்போது பிரபாகரன், 'என் வாழ்க்கையில் நான் ஒரு சொட்டு கண்ணீர் விட்டது கிடையாது.. உன்னை என் பிள்ளை மாதிரி வெச்சிருந்தேன்டா… உன்னையைத்தான் முதலமைச்சராக்குவேன் எனச் சொல்லி இருந்தேன்டா.. நீ எப்படி இப்படி துரோகம் செஞ்ச..' எனக் கேட்டார்.

ஆனால், அவர் அப்படிப் பாடுபட்டார்.. இப்படிப் பாடுபட்டார்.. இந்தியச் சிப்பாய்களை ஒப்படைக்க மாத்தையாவைத்தான் அனுப்பி வைத்தார் பிரபாகரன்.. புலிகளின் பத்திரிகை பொறுப்பைக் கூட அவரிடம் கொடுத்திருந்தார்கள்.. என முன்பு அப்படி செஞ்சார் இப்படி செஞ்சார் எனச் சொன்னால் எப்படி ஏற்க முடியும்? ஒரு காலத்தில் நன்றாக பணியாற்றிவிட்டு பின்னர் துரோகம் செய்வது என்பது சரித்திரத்தில் நிறையப் பார்த்திருக்கிறேன் நான்.. அதைப் பற்றி எல்லாம் நான் இப்போது விரிவாகப் பேச விரும்பவில்லை" என்றார்.
துரோகிப் பட்டம்
இதற்கு மல்லை சத்யா, "வைகோ சொன்ன வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கினார், வைகோ. தற்போது துரை வைகோவுக்குக் கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார். இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்குத் துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார்" என்றார்.
இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய ம.தி.மு.க சீனியர்கள், "ம.தி.மு.க-வில் வைகோவின் நம்பிக்கைக்குரியோர்களில் மல்லை சத்யா முதன்மையானவர். பதிலுக்கு சத்யாவும், வைகோவுக்கு உண்மையாகவே இருந்துவந்தார். கூடவே கடுமையாக உழைத்தார். வைகோவுக்குப் பிறகு தன்னிடம்தான் கட்சி வரும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. இந்தச்சூழலில்தான் துரை வைகோவின் என்ட்ரி மல்லை சத்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம்.

அதேநேரத்தில் வைகோ - மல்லை சத்யா நெருக்கம் துரை வைகோவுக்கு உறுத்தலாகவே இருந்தது. இதன் விளைவு இருவருக்கும் இடையில் 'ஈகோ' மோதல் வெடித்தது. ஒருகட்டத்தில் துரை வைகோவின் படம் இல்லாமல் போஸ்டர்களை அடித்து ஓட்டினார், மல்லை சத்யா. இதில் கடுப்பாகி, 'மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்' என வைகோவிடம் கூறினார் துரை வைகோ.
அதற்கு வைகோ சம்மதிக்கவில்லை. இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்தார். ஆனால் மல்லை சத்யா அதிருப்தியில்தான் இருந்துவந்தார். இந்தச்சூழலில்தான் கடந்த 24.6.2025 அன்று ம.தி.மு.க-விலிருந்து விலகிய திருப்பூர் முத்து ரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் தி.மு.க-வில் இணைத்தனர்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு முத்து ரத்தினமும், மல்லை சத்யாவும் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். இதுதான் வைகோவை ஆத்திரமூட்டியிருக்கிறது. கடந்த 30.6.2025 ஆண்டு தாயகத்தில் நடந்த கூட்டத்திலேயே இந்த பிரச்சினை வெடித்துவிட்டது. அன்றைய தினம் அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ், 'தி.மு.க-வுடன் மல்லை சத்யா ரகசிய உறவில் இருக்கிறார். கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அப்போது தி.மு.க-வின் சின்னத்தில் எங்களை போட்டியிடச் சொன்னது ஸ்டாலினுடைய பெருந்தன்மைதான் என மல்லை சத்யா பேட்டி கொடுத்தார்' என்றார்.

அதற்கு மல்லை சத்யா, 'நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததையெல்லாம் இப்போது ஏன் பேசுகிறீர்கள். எனக்கு துரோகி பட்டம் கட்ட பார்கிறீர்களா?' என கேட்டு எதிர்ப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட வைகோ, 'அர்ஜுன் ராஜ் கேட்ட கேள்விக்கு மல்லை சத்யா பதிலளித்துவிட்டார். ஆனால் எனது கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியாது. ஒரு காலத்தில் என்னோடு மிகவும் நெருக்கமாக இருந்த திருப்பூர் துரைசாமி, என் மனசாட்சியைப் போல நான் நேசித்த தம்பி வல்லம் பஷீர் உள்ளிட்டவர்கள் எல்லாம் இன்று வெளியே சென்று என் மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் மல்லை சத்யா நீங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். திருப்பூர் முத்துரத்தினம் அறிவாலயம் சென்று ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க-வில் சேர்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை நீங்களும் அவரும் ஒரே காரில் சென்றிருக்கிறீர்கள். இதெல்லாம் எனக்கு தெரியாதென்று நினைக்கிறீர்களா?. விருப்பம் இருந்தால் கட்சியில் இருங்கள். இல்லைன்னா போயிடுங்க" என்று கொதித்திருக்கிறார்.
இதில் மனமுடைந்த மல்லை சத்யா பாதியிலே வெளியேறிவிட்டார். மல்லை சத்யாவின் செயல்பாட்டைத் தலைவரால் தாக்கிக்கொள்ள முடியவில்லை. முன்னதாக இந்த விஷயத்தை வைகோவிடம் போட்டுக்கொடுத்தது துரை வைகோ தரப்புதான். இதில்தான் கடுப்பாகி 'துரோகி' எனப் பேட்டி கொடுத்திருக்கிறார்" என்றனர்.
ஆனால் இதற்கு பின்னால் வேறு ஒரு கணக்கும் இருப்பதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள், "ம.தி.மு.க--வுக்கு சொந்தமாக கோடிக்கணக்கான மதிப்பு கொண்ட சொத்து தமிழகம் முழுவதும் இருக்கிறது. இதையெல்லாம் மகன் துரை வைகோ பொறுப்பில் செல்ல வேண்டும் என நினைக்கிறார், வைகோ. எனவேதான் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நேரத்தில் அவசர அவசரமாக துரையை கட்சிக்குள் கொண்டுவந்தார். அப்போது சீனியர்கள் அதிருப்தியடைவது குறித்து வைகோ கவலைப்படவில்லை. ஒவ்வொருவராக அதிருப்தியில் வெளியில் சென்றுவிட்டனர்.
ஆனால் மாநிலம் முழுவதும் கட்சிக்கென இருக்கும் சொத்துக்களில் ஏதேனும் சட்ட பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவையெல்லாம் துரை வைகோவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதற்கு மல்லை சத்யா எதிர்ப்பு தெரிவிக்க கூடும் என்பதால்தான் பழைய பிரச்னையை தற்போது வைகோ தரப்பு கிளப்பி அவரை வெளியில் அனுப்ப திட்டமிடுகிறார்கள்" என்றனர்.
ஆனால் இதனை முற்றிலும் மறுக்கிறார்கள் துரை வைகோ ஆதரவாளர்கள். "ம.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுடன் தொடர்ந்து மல்லை சத்யா தொடர்பில் இருப்பதால்தான் தலைவர் விமர்சனம் செய்தார். வேறு எந்த காரணமும் இல்லை. பா.ஜ.க-வுடன் நெருக்கமாக துரை வைகோ இருக்கிறார் என சொல்வதில் துளியும் உண்மை இல்லை. துரைக்கு கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை வழங்கப்போவதாக வெளியாகும் தகவலும் திட்டமிட்டு சிலர் பரப்பும் அவதூறு கருத்துக்கள்தான்" என்கிறார்கள்.

முன்னதாக கடந்த 6.7.2025 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் “இரட்டை இலக்கத் தொகுதிகள் கேட்போம் என நான் பேசவே இல்லை!”- வைகோ சரண்டரான பின்னணி!" என்கிற தலைப்பில் வெளியான கட்டுரையில், 'மல்லை சத்யா விரைவில் தி.மு.க-வுக்கு செல்லக்கூடும்' என எழுதியிருந்தோம். அதன்படி தற்போது ம.தி.மு.க-வுக்குள் பெரும் களேபரமே வெடித்திருக்கிறது. "மல்லை சத்யா தீவிரமாக தி.மு.க-வுக்கு செல்ல முயற்சித்து வருகிறார். அவரை அக்கட்சி இணைத்துக்கொள்ளும் பட்சத்தில் தி.மு.க, ம.தி.மு.க கூட்டணியில் மிகப்பெரிய சிக்கல் ஏற்படும். துரை வைகோ பா.ஜ.க-வுடன் அதிகம் நெருக்கம் காட்டி வருவதையும் அவரது நகர்வுகளையும் உளவுத்துறையின் மூலமாக தி.மு.க மோப்பம் பிடித்துவிட்டது. எனவேதான் ஏற்கெனவே முத்துரத்தினம் உள்ளிட்ட ம.தி.மு.க-வினரை தி.மு.க-வில் இணைக்க முதல்வர் ஸ்டாலின் 'ஓகே' சொல்லியிருந்தார். அதேபோலத்தான் மல்லை சத்யா விவகாரத்திலும் தி.மு.க 'ஓகே' சொல்ல கூடும். எனவே வரும் நாட்களில் தமிழக அரசியல்களத்தில் பெரும் புயல் வீசும்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல அதிரடிகள் பல கட்சிகளில் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb