செய்திகள் :

அந்த மீன் என்னைவிட ஞானமானது – ஜான் டன் | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 15

post image

சூரிய வெளிச்சத்தில் உதிரும் நிழலைப் போல், பகலிலும் கூடவே  வந்து கொண்டிருந்த நிலவைப் பார்த்துக்கொண்டே அலுவல் முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். பொதுப்போக்குவரத்துகளில் பயணிக்கும்போது தொலைபேசியில் எதையாவது பார்த்துக்கொண்டே நேரத்தைக் கடத்துவது வழக்கமாகிவிட்டது. ‘ரீல்ஸ்’-ல் வந்துகொண்டிருந்த காணொளிகளை விரல்கள்  நகர்த்திக்கொண்டிருந்தன. 

அப்போது  ஒரு நேர்காணலின் காணொளி ஒன்றில் ஜான் டன்னின் கவிதைகள் தன்னைப் பாதித்ததாக தமிழச்சி தங்கபாண்டியன் கூறியபோது மகிழ்ந்தேன்.   முன்பொரு நாள் வேறு எதையோ இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது ஜான் டன் கவிதைகளைப் பதிவிறக்கம் செய்ததைத் தேடியெடுத்து அவர் தரும் அனுபவங்களை இறக்கிக்கொண்டேன். 

ஷேக்ஸ்பியர்

ஜான் டன் ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவர். இருவரும் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலத்தில் எழுத வந்த முக்கியமான எழுத்தாளர்கள். ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களுக்காகப் பிரபலமானவர் என்றாலும், டன் ஒரு மெய்யியல் கவிஞராக, மதகுருவாக அறியப்பட்டவர்.  இருவரும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து வைத்திருக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.  

டன்னின் கவிதைகள் பெரும்பாலும் தத்துவார்த்தமாகவும்,  தர்க்கரீதியிலும் பேசக் கூடியவை.  எந்த ஒரு கேள்வியையும் தீர விசாரிப்பதே மெய் என்பதுபோல் தீவிரமான அலசல், பகுப்பாய்வு மூலமாகவும் தனது பார்வையை விளக்குகிறார்.  மனிதநேயமும் இயற்கையின் மீதான இயல்பான அணுக்கமுமாய், டன் கவிதைகளில் ஓர் அமைதி ஊடாடுவதைக் காணமுடிகிறது. தன்னியல்பில் சிதறிலின்றி வாழ்வின் அர்த்தங்களை விசாரித்துச் செல்கிறார் .

டன்னின் கவிதைகள் பார்ப்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் வாசிப்பதற்குக் கடினமாகயிருந்தன. பழைய ஆங்கில மொழிநடை, படித்தவுடன் எளிதில் புரிந்துவிடவில்லை. சமகால அனுபவத்தோடு டன் தரும் அவர் கால அனுபவத்தை ஒப்பீடாக நினைத்துப் பார்க்கையில், அவர் அகநிலை என்னவாக இருந்திருக்கும் என்பது கேள்வியாக எழுவதைத் தவிர்க்க இயலாது. ஒரு தொலைவிலிருந்து இறந்த காலத்தைப் பார்ப்பது வினோதமான அனுபவம்தான். இருப்பினும், கவிதை தனக்கான காலத்தைத் தாண்டி அனுபவங்களை முன்னிறுத்துகின்றன.

கவிதைகளை அணுக வெறும் பயிற்சி மட்டும் போதாது. அதையும் தாண்டி ஒரு மனத்தளம் தேவைப்படுகிறது. அதற்கு அவகாசமும் பொறுமையும் வாய்க்க வேண்டும். டன் தத்துவார்த்தக் கவிஞராக அறியப்பட்டாலும் அழகியலோடும், திடமான உவமைகளோடும்   அறிவார்த்தமானதாகவும், உளவியல் சிக்கல்கள் நிறைந்ததாகவும் உள்ளன. அக்காலத்தில் மரபார்ந்த கவிதையின்மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இவருடைய பாணி புதுமையையும் ஈர்ப்பையும் தந்திருக்க வேண்டும். 

முதலில் இக்கவிதைகளை வாசிக்கும்போது கவிதை மொழியில் ஒரு மாயம் இருப்பதை கவனிக்க முடிந்தது. ‘எனக்குப் போதை வேண்டுமாயின் நான் கவிதையை நாடுவதில்லை, திருவாசகமோ, திருமறையையோ எடுத்து உரக்க வாசிக்கும்போது, பொங்கிவரும் நாத வெள்ளத்தில் திளைக்கும்போது அதே போதையைப் பெறுகிறேன்’, என்ற நகுலனைப் போல் டன்னின் கவிதைகளும் ஆன்மீக தளத்தை நோக்கிப் பயணித்தன. பெரும்பான்மையான இடங்களில் நகுலனோடு சேர்ந்து ஜான் டன் கவிதைகளும் ஒரே அகநிலையில் உலவுவதை அவதானிக்க முடிகிறது.

பெரும்பாலும் தீவிர இலக்கிய ஆர்வலர்களால் அதிகம் வாசிக்கப்படும் ஜான் டன் 1572 ஆம் ஆண்டு பிறந்தவர். அவரின் தந்தை இரும்பு வியாபாரி. தாயார் சர். தாமஸ் மோரின் பேத்தி. சம்பிரதாயங்களில் அதீதப் பற்றினைக் கொண்டவர். 

ஆக்ஸ்போர்டு

ஜான் டன், ஆன் மோரின் தந்தையிடம் சர் தாமஸ் எஜர்டனின் இல்லத்தில் செயலாளராக இருந்தபோது, அவரைக் காதலிக்கத் தொடங்கி, பிறகு திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணம் ஆரம்பத்தில் ரகசியமாக நடந்தது, பிறகு பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. டன் குறுகிய காலத்திற்குச் சிறையிலும் அடைக்கப்பட்டார், அதே நேரத்தில் தனது பதவியையும் இழந்தார்.

17ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இலக்கிய அரங்கில் "மெய்யியல் பள்ளி" என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான கவிதைப் பள்ளி தோன்றுகிறது.  "மெட்டாபிசிக்ஸ்" என்ற வார்த்தை அப்போதுதான் கண்டறியப்பட்டது. மெய்யியல் (மெட்டாபிசிகல்) கவிஞர்கள் 19 ஆம் நூற்றாண்டுகளில்  விக்டோரிய மரபுக்கவிஞர்களால் புறக்கணிக்கப்பட்டனர், ஆனால் இருபதாம் நூற்றாண்டில் வாசகர்கள், அறிஞர்கள் மத்தியில் ஒரு புதிய ஆர்வம் ஏற்பட்டது, அவர்கள் மெய்யியல் கண்ணோட்டத்தில், அழுத்தமான அரசியல், அறிவியல் எழுச்சிகளைப் புரிந்துகொள்ள முயன்றதாக "தி மெட்டாபிசிகல் போயட்ஸ்" என்ற தனது கட்டுரையில், டி.எஸ். எலியட் எல்லாவகையான அனுபவங்களுக்கும் ஆட்படுதல் பற்றிய குறிப்பை எழுதியுள்ளார். 

தொடக்கத்தில் டன் தனது கவிதைகளைத் தாள்களில் கையால் எழுதி அதனைப் பகிர்ந்திருக்கிறார். அவர் இறந்து இரண்டாண்டுகள் வரை கவிதைகள் எதுவும் முறையாக வெளியிடப்படவில்லை. அதன் பிறகுதான் அந்தக் கவிதைகள் பிரபலமடையத் தொடங்கின. ஆரம்பத்தில் கிண்டலான தொனியோடு நகைச்சுவை உணர்வு கலந்த கவிதைகள்தான் பிரபலமடைந்தன. இறுதிவரை ஆன்மிகத்தில் அமைதியடைய முடியவில்லை என்ற ஏக்கம் கவிதைகளில் இருந்துகொண்டேயிருந்தது. டன் மிகவும் சுறுசுறுப்பானவர், புத்திசாலி, சுயக்கட்டுப்பாடுகளுடன் நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்தவர்.

1600-களின் தொடக்கத்தில் டன்னின் தீவிரமான படைப்புகள் வெளிவந்தன. அங்கதக் கவிதைகள், இரங்கற்பாக்கள், காதல் கவிதைகள் போன்றவை அக்காலக்கட்டத்தைச் சேர்ந்தவை. 'Go and catch a falling star' என்ற பாடல் பெண்களின் மனநிலையின் இலகுத்தன்மையைக் காட்சிப்படுத்திய கவிதை. விழுந்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தைப் பிடிப்பது அல்லது கடல் கன்னிகள் பாடுவதைக் கேட்பது என்பது பெண்களின் மனத்தில் இடத்தைப் பிடிப்பது போன்றது என்கிறார். சாத்தியமற்ற செயல்பாடுகளைப்போல் நேர்மையான, உண்மையான பெண்ணைக் கண்டுபிடிப்பது, முதலில் விட்டுவிட்டு பிறகு அவளைத் திரும்பப்பெறுவது எவ்வளவு கடினம், சரிதான்.

அந்தக் காலத்தில் இங்கிலாந்தின் மேட்டுக்குடி பெண்களுக்கான தேர்வுகள் எப்படி இருந்திருக்கிறதென்பதை யோசிக்கத் தோன்றுகிறது.  பல்வேறு வகையான பெண்களுடன் தனக்கேற்பட்ட விசித்திர உணர்வுகளையும் அனுபவங்களையும் பதிவுசெய்கின்றன. தீவிரத்தன்மையுடன் கூடிய பாலியல் அனுபவங்கள் சார்ந்த மனநிலையை எடுத்துச் சொல்வதாக பல கவிதைகள் இருக்கின்றன.

சிக்கலான கட்டமைப்பிலான கவிதைகள் 1600-1604 காலகட்டத்தில் எழுதப்பட்டவை.  பிறகு இயற்கை,  காதல் கவிதைகளையும் எழுதியுள்ளார்.   தனது புகழ்பெற்ற 'An Anatomy of the World’,  ‘The Progress of the Soul' ஆகிய இரண்டு படைப்புகளைத் தந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு ‘டிகிரி ஆப் டிகினிட்டி’ என்ற கௌரவத்தை வழங்கியது. 1617 ஆம் ஆண்டு அவரின் மனைவி, ஏழு குழந்தைகளைத் தவிக்கவிட்டு இறந்துபோனார்.  அத்துயரம் டன்னுக்குக் கடவுளின் மீதான பக்தியையும் அதீதப் பற்றுதலையும் ஆர்வத்தையும் தூண்டியது. 

மரணமே, பெருமைக் கொள்ளாதே,

சிலர் உன்னை வலிமையானவன்,

பயங்கரமானவன் என்று அழைத்தாலும்,

நீ அப்படியில்லை;

மரணத்தை எதிர்த்துக் கேள்விக் கேட்கும் வகையில் எழுதப்பட்ட மிகவும் பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று.  டன்னுக்கு டைபாய்டு நோய் வந்தது. அப்போது நோயின் கடுமையில் மரணத்திடம் பேசுவது போன்ற வரிகள். 

மரணமே நீ பெருமைப் படாதே, நீ யாரை தூக்கி எறிய நினைக்கிறாயோ அவர்களை எறிகிறாய், ஆனால் உன்னால் என்னைக் கொல்ல முடியாது.  சிறந்த மனிதர்கள் உன்னுடன் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களுடைய எலும்புகளிலிருந்து ஆன்மாக்கள் விடுவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் இன்னும் விழித்துக்கொண்டிருக்கிறோம், மரணமே உன்னால் என்னை அழைத்துச்செல்ல முடியாது, நானாக வரும் வரை, நீ அப்போது இறந்துவிடுவாய், மரணமே நீ எல்லோரையும் அழைத்துச் செல்வதற்காகப் பெருமைப்பட்டுக்கொள்ளாதே -என்பதாகத் தனது நோய்மைக்கிடையே மரணத்தையும் ஆன்ம வலிமை பெறுவது பற்றியும் பேசுகிறார்.

மரணத்தை யாரும் தவிர்த்துவிட முடியாது என்றாலும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றது.  ஒருவர் ஆன்மிகச் சிந்தனைகள் உடையவராக இருப்பின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்வு இருக்கின்றது என்ற கருத்தைக்கொண்ட இந்தச் சிறிய கவிதை தத்துவார்த்த ரீதியில் மரணத்தை ஆராய்கிறது.  

இது மட்டும் நிச்சயமானால் எத்தனை விதமான மாறுபட்ட உணர்வுகளால் நிரந்தரத் துயரமும் மென்மையும் ஆதூரமும் நிறைந்த வரிகள், கச்சிதமான வரிகளால் மரணப் பயத்தில் தத்தளிக்கும் மனத்திற்கு அதிர்வளிக்காத தன்னனுபவத்தை விவரிக்கும் சொற்கள் அவை .

மரணம் ஒரு சிறிய உறக்கம் போலிருந்தாலும் விடுபடுவதே ஒரு புதுத்தொடக்கம் என்பதை நம்ப வைக்கும் மென்மையை அவர் கவிதைகளில் காண்கிறோம்.  மரணம் ஒரு கவிதை; தவிர்க்க இயலாதென்ற உண்மையை மறைந்திருக்கும் வரிகளின் வழியாக வாசிக்கிறோம். மறுபடியும் வாசிக்கமுடியாத  நூலைப் போல,  மரணத்தைத் தொடாமல் வேடிக்கை பார்க்கும் சாட்சியொன்றின் தொனி ஓங்கியொலிக்கிறது.  கடலில் மிதக்கும் தக்கையைப் போல் மரணம் தெரிகிறது. அதற்கோ இரும்புகனம். 

பரவசம் (The Ecstasy) என்ற கவிதை விருத்தப்பா நடையில் அமைந்தது. காதலர் இருவரின் மனங்களை அடர்த்தியுடனும் கூர்மையுடனும் அவதானிக்கிறது. உண்மையான காதல் உடலின் ஈர்ப்பைத் தாண்டியபிறகு ஆன்மிக இணைப்பாக மாறுகிறது. காதலை அபரிமிதமான அனுபவமாக்கி அதில் இரண்டு ஆன்மாக்கள் ஒன்றாக இணையும்போது உடலின் இணைப்பு திறந்து, திறந்து மீண்டும் மூடிக்கொண்டே இருக்கிறது. காதல், இரண்டு நபர்களின் உணர்வுகளை வலுப்படுத்துகிறது. காதலை நிரந்தரமான ஆன்மிக இணைப்பாகக் காட்டுவதன் மூலம், அது உடல் சார்ந்ததல்ல, அதில் ஆன்மிக வலிமை முக்கியமானதென்று வலியுறுத்துகிறது. காதல் என்னும் அனுபவத்தை உடலின் பரிமாணத்துக்கு அப்பாற்பட்ட ஓர் உயர்ந்த மென் அனுபவமாக்கிக் கைகளை ஒன்றோடென்று கோத்துக்கொள்ளத் தூண்டும் கவிதை.

 ஜான் டனின் நகைச்சுவையான இன்னொரு கவிதை 'The Flea', இதில் தன் காதலியுடன் இணைவதைப் புழுவின் நடவடிக்கைக்கு உவமையாக்குகிறார். அந்தப் புழு, காதலியின் ரத்தத்தை உறிஞ்சுவதையும் இருவருக்கிடையிலான இணைப்பையும் குறிக்கிறது.   புழுவைக் கொல்வது பாவமாக இருக்கும், ஏனெனில் அது மூன்று உயிர்களைக் கொல்வதற்கானது எனச் சொல்வதன் மூலம் காதலின் உடல் தளத்தைக் கேலிக்குள்ளாக்குகிறார். அவள் ஏற்கனவே அப்பாவிப் பூச்சியைக் கொன்றுவிடுகிறாள். இருப்பினும், அந்த அப்பாவிப் புழு ரத்தத்தை உறிஞ்சியதைத் தவிர வேறெந்தக் குற்றமும் செய்யவில்லை.  புழு உறிஞ்சிய ஒரு துளி இரத்தத்தை இழப்பது எந்த வகையிலும் பலவீனப்படுத்தவில்லை என்பதை அவளே ஒப்புக்கொள்கிறாள்  அவள் எந்த மரியாதையையும் இழக்கவில்லை. உண்மையான ஆன்மிக அன்பு கூட உடல் இணைப்பை அதன் அடிப்படையைக் கொண்டுள்ளது. ஜான் டன்னைப் பொறுத்தவரையில் சல்லாபத்தைத் தாண்டி உடலும் ஆன்மாவும் திருப்தியடைய வேண்டும்; மெய்யியலைத் தேடி, மரணத்தைக் குறித்த ஆழ்ந்த சிந்தனையைக் கிளர்த்தவேண்டும் காதலும் கவிதையும்.

ஆணாதிக்கச் சமூகத்தின் மத்தியில் கட்டுப்பாடுகளுடன் காதலின் கொடுமைகளைப் பற்றிப் பேசும் Confined Love, இதில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரங்களை அடைவதற்கான சுதந்திரமின்றி இருந்ததையும், ஆண்கள் மட்டும் பலருடன் சுதந்திர உறவுகளைப் பேணமுடியுமென்றப்  பாகுபாட்டைக் கை விரல்களைக் கோர்த்தும் இணைந்தும் இருக்க விரும்புகிறவர்கள் பெண்களைத் தேவை முடிந்த பின் விலக்கி வைப்பதையும் சுவற்றில் படிந்திருக்கும் கறையைப் போல் பெண்களின் வாழ்வு ஆகிவிடும்  குறுகிய மனப்பான்மையையும் குறிக்கிறது.

17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூக, கலாசாரச் சூழலைச் சொல்கிறது. அப்போது பெண்கள் பெரும்பாலும் உடைமையாகக் கருதப்பட்டு, தங்களின் வாழ்க்கையை இழந்ததையும் அவர்களுக்குச் சமமான பிரதிநிதித்துவம் இல்லாத நிலையையும் எடுத்துச்சொல்கிறது. இக்கவிதையின் வழியாகப் பெண்ணியத்தின் தோற்றுவாயையும், பெண்களுக்கான உரிமைகளையும் திறந்த மனத்துடன் பேசுகிறார்.

'The Bait' என்ற கவிதையும் நகுலனின் கவிதைகளை நினைவூட்டுகிறது. என்னுடன் காதலுடன் இருங்கள், தங்கமயமான மணலும், படிக ஓடைகளும், பட்டு போன்ற வரிகளும், வெள்ளிக் கொக்கிகளுமாக இந்நதி கிசுகிசுத்தோடுகிறது. ஒவ்வொரு மீனும் காதலுடன் நீந்துகிறது. ஒவ்வொரு மீனும் காதல் கொண்டு நீரில் விளையாடுகிறதென்று செல்லும் அக்கவிதை

நீயே உன் சொந்த தூண்டில்

அதில் பிடிக்கப்படாத அந்த மீன்

ஐயோ, என்னை விட ஞானமானது.

நகுலனை அப்படியே நினைவுப்படுத்திய வரிகள், கவிதைக்குப் பிந்திய அமைதியை டன்னின் கவிதைகளிலும் காணமுடிகிறது. இயற்கையும், காதலும் நிறைந்த அழகு பரிசுத்தமான நேசத்தைச் சொல்கிறது, அது வழங்கும் எளிய மகிழ்ச்சிகளைக் கொண்டாடுகிறது.

'Canonization' என்ற கவிதை மரியாதைக்குரிய அன்புடன், ஒருவருக்கொருவர் இயைந்து அமைதியுடன் வாழ்வதையும், அன்பு எப்போதும் குத்திக் கிழிக்கும். காதலுடன் வாழமுடியாவிட்டால் அதைவிட்டு இறந்து விடலாம் என்கிறது.

 'Batter My Heart, Three-Personed God' – என்பது கடவுளோடு பேசும் தீவிரமான கவிதை, இதில் டன் கடவுளுடன் பேசுகிறார். அடர்ந்த வனமாகத் திகழக்கூடிய ஆன்மாவைக் கட்டாயப்படுத்தி, செழுமைப்படுத்த வேண்டுமென்கிறார். பரபரப்பான கிழட்டு முட்டாளாகவும், கட்டுக்கடங்காத சூரியனுடனும், ஜன்னல்கள் வழியாகவும், திரைச்சீலைகள் வழியாகவும் எங்களை அழைக்கிறாயே? உன் அசைவுகளுக்குக் காதலர்களின் பருவங்கள் ஓட வேண்டுமா என்று கடவுளுடன் உரையாடுகிறார்.

‘இறுதிச் சடங்கு’ என்ற கவிதை,

என்னை மூட வருபவர்களை ஒன்றும் செய்யாதீர்கள்

அதிகம் கேள்வி கேட்காதீர்கள்

மரணத்திற்குப்பின் என்னுடனே அவளது நினைவுகளையும் சேர்த்துப் புதைத்துவிடுங்களென இறுதிச் சடங்கிற்கான தனது விருப்பங்களைச் சித்தரிக்கிறது.

இருப்பதற்காகத் தான் வருகிறோம்

இல்லாமல் போகிறோம் – என்பது நகுலனின் வரிகள்

எளிமையாக இருந்தாலும் ஆழமான உண்மையைச் சொல்வது போல் மரணத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதலைக் காட்டும் இன்னொரு கவிதை எந்த மனிதரும் தீவாக இருக்கமாட்டார் என்பது. வாழ்வையும் மரணத்தையும் தத்துவார்த்த ரீதியில் அணுகக் கூடியதாக இருக்கிறது.

நகுலன்

அன்பே தெய்வம் என்ற கவிதை அன்பின் பரிணாம வளர்ச்சியையும் அதன் சிக்கலான உளவியலையும் சொல்லும்  கவிதை.  தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மூழ்கும் டன்னின் போக்கைப் படம்பிடித்துக்காட்டுகிறது. அன்பின் தன்மை மற்றும் சாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதற்குக் கவிதையைப் பயன்படுத்துகிறார். காதல் பற்றிய அவரது மெய்யியல் ஆய்வின் சிறந்த முன்னுதாரமாக விளங்குகிறது.

 முன்னணி ஆங்கிலக் கவிஞராக விளங்கிய டன் ஒரு கவிஞர் என்பதை விடச் சிறந்த பேச்சாளராக அதிகம் புகழ்பெற்றார்.  1623 ஆம் ஆண்டு அவர் நோயுற்றார். 1630-களில், அவரது உடல்நிலை முற்றிலும் மோசமடைந்தது. 1631 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாள்,  அவர் வாழ்க்கை முழுக்கப் பரிசீலித்த மரணம் அவரை ஆட்கொண்டது. அவர் மரணத்துக்குப் பிறகு, பழைமையின் செதில்கள் உதிர்க்கப்பட்ட டன்னின் கவிதைகள் இன்று கவனிக்கப்படுகிறது.   யாருமற்ற இடத்தில் என்ன நடந்தது ஜான் டன்…

-   சொற்கள் மிதக்கும்

Sahitya Akademi Awards: விஷ்ணுபுரம் சரவணனுக்கு 'யுவ புரஸ்கார்', லக்‌ஷிமிகருக்கு பால புரஸ்கார்!

சாகித்திய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருது மற்றும் பால புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளில் இவ்விருதுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க

நாகர்கோவில்: `கண்ணாடி பாலம், நாகராஜா கோயில்..'- வண்ண ஓவியங்களால் அழகாகும் மேம்பாலம் | Photo Album

நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மேம்பாலம் தூண்கள்நாகர்கோவில், பார்வதிபுரம் மே... மேலும் பார்க்க

தேன் நிறைந்த காடு: ரவீந்திரநாத் தாகூர் கடல் தாண்டிய சொற்கள் - பகுதி-14

உபகுப்தாபௌத்தக் கொள்கைகள் பழங்கதைகளாக ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே நின்று விட்டனவா? பௌத்த கதையின் மீள்பார்வையாக ‘உபகுப்தா’ கவிதை விட்டுச்சென்ற செய்தி இன்றைக்குப் பொருத்தப்பாடுடையதா? பொதுவாக நவீன கவிதைகள... மேலும் பார்க்க

Li Qingzhao: 'வன அன்னத்தின் பாதை' - லி சிங் சோவ் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 13

சமீபத்தில் இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, லி சிங்சோவ் (Li QingZhao) இடைச்செருகலாக வந்தாள். அப்போது பெயரை மட்டுமே குறித்து வைத்துக்கொண்டேன். பிறகொரு நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்குச் சென்ற... மேலும் பார்க்க

கடல் தாண்டிய சொற்கள்: நீண்டு வளர்ந்து நுனியில் கனிந்தவள் - எமிலி டிக்கின்சன் | பகுதி 12

விழித்த நிலையில் கனவுகாண்பதைப் போல், கவித்துவ மனநிலையிலேயே எப்போதும் திளைத்திருந்தவர் எமிலி டிக்கின்சன். அணைக்கமுடியாமல் எரியும் நெருப்பாக உணர்வுகள் கொந்தளிக்க, தனிமையில் திரியும் மௌனத்துக்கிடையே மெல்... மேலும் பார்க்க

Jafar Panahi: ஹிஜாப்பை எதிர்த்து உயரிய விருதை வென்ற கலைஞன் - யார் இந்த ஜாஃபர் பனாஹி?

கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் இடைவிடாமல் மொத்த அரங்கமே அதிர, அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகின்றனர். உலக சினிமா ஆர்வலர்கள் இம்முறையும் அவர் காணொளி மூலம் விருது பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அனைவரு... மேலும் பார்க்க