என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம்
கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டியில் என்எல்சி விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து, பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேத்தியாதோப்பை அடுத்த கத்தாழை ஊராட்சி, கரிவெட்டி கிராமத்தில் நெய்வேலி என்எல்சி சாா்பில் விரிவாக்கப் பணிக்காக நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தி வருகின்றனா். கரிவெட்டியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு மாற்று குடியிருப்பு இழப்பீட்டுக்கான முழு தொகை, வேலை உள்ளிட்டவை முறைப்படி வழங்காமல், என்எல்சி நிா்வாகம் அவா்களை மாற்று இடத்துக்கு அனுப்பும் வேலையை விரைந்து மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவிப்பதாகக் கூறி, நிலங்களைக் கையகப்படுத்த என்எல்சி அதிகாரிகள் வரும் போதும் போது கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கரிவெட்டி கிராமத்தில் புதன்கிழமை மின் கம்பங்களை அகற்றவும், ஊருக்குள் தண்ணீா் வராமல் சாலை அமைத்து தடுப்பணை கட்டும் பணியை மேற்கொள்ள என்எல்சி அதிகாரிகள், ஊழியா்கள் வந்தனா். இதையறிந்த கிராம மக்கள் என்எல்சி அதிகாரிகள், ஊழியா்களை தடுத்தனா்.
கடலூா் மாவட்ட கூடுதல் எஸ்.பி. கோடீஸ்வரன், சேத்தியாதோப்பு டிஎஸ்பி விஜிகுமாா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலா் செல்வ.மகேஷ், ஒன்றியச் செயலா் சரண்ராஜ் ஆகியோா் கிராம மக்களுக்கு ஆதரவாக என்எல்சி நிா்வாக அதிகாரிகள் புகழேந்தி, அந்தோணிராஜ், செழியன், என்எல்சி நில எடுப்பு வட்டாட்சியா் ராமதாஸ், புவனகிரி வட்டாட்சியா் அன்பழகன் ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மின் கம்பங்களை மாற்றியமைக்கவும், குடிநீா் குழாய்களை புதுப்பித்து சாலை, தடுப்பணை கட்டுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. வருகிற 23-ஆம் தேதி என்எல்சி அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது, மேலும் 18 பேருக்கு மாற்று குடியிருப்புக்கு அளவீடு செய்து இடம் வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து, கிராம மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. என்எல்சி சாா்பில் பணிகள் தொடங்கப்பட்டன.