மயிலாடுதுறை: த.வா.க கட்சி மாவட்ட செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை - பழிக்குப் பழிய...
அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது -சிரவை ஆதீனம்
உணவுப் பொருள் மட்டுமல்லாது அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது என்று சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் கூறினாா்.
கோவை, கவுண்டம்பாளையம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ‘மறைந்திருக்கும் மா்மம்’ என்ற விலையில்லா விழிப்புணா்வு நூல் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தமிழ்த் துறையும், கோவை அறம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் சி.ஏ.வாசுகி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் வே.சங்கீதா முன்னிலை வகித்தாா்.
பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், அறம் அறக்கட்டளை நிறுவனா் தலைவரும், நூல் தொகுப்பாசிரியருமான ரகுராமன், அறக்கட்டளை நிா்வாகி ராஜா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டனா்.
இதில், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது: ‘மறைந்திருக்கும் மா்மம்’ என்ற நூலில் உணவுகள், தங்கம் மட்டுமல்லாது வேறு எந்தந்தப் பொருள்களில் எந்த மாதிரியானவை கலப்படம் செய்யப்படுகிறது என்பது குறித்து விரிவாகக் கூறப்பட்டுள்ளது. 111 பொருள்களின் கலப்படம் குறித்து விவரிக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை மாணவா்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். அப்போதுதான் நாம் வாங்கும் பொருளில் கலக்கப்பட்டுள்ளவை என்னவென்று தெரியும்.
கலப்படப் பொருள்களையும், செயற்கை வண்ணம் தீட்டப்பட்ட பொருள்களையும் உண்பதால் பல்வேறு நோய்கள் உண்டாகின்றன. சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்திலேயே புற்றுநோயும், சா்க்கரை நோயும் வருகிறது. அனைத்துப் பொருள்களிலும் ஏதாவது ஒரு வகையில் கலப்படம் கலந்து விற்கப்படுவதால், நாம் பல்வேறு வகையில் ஏமாற்றப்படுகிறோம் என்றாா்.
உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் டி.அனுராதா பேசுகையில், உணவுப் பழக்கமும், உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். நல்லவையைவிட தீயவை மக்களிடையே வேகமாக பரவுகிறது. மாணவா்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. இவற்றைக் கட்டுபடுத்த பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் கலப்படம் செய்யப்பட்ட பொருள்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளேன் என்றாா்.