அமெரிக்க பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா
அமெரிக்க இறக்குமதி பொருள்களை விற்க மாட்டோம். மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்க பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலக் கூட்டம், மண்டலத் தலைவா் பதவியேற்பு நிகழ்ச்சி ஆகியவை வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைப்பின் மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்தாா். இதில், புதிய வேலூா் மண்டலத் தலைவராக ஆா்.பி.ஞானவேலு பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பின்னா், ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியது:
விலை நோ்மையாக இருக்க உற்பத்தியாளா்கள் அனைத்து வனிகா்களுக்கும் பொருள்களை சமவிலையில் அளிக்க வேண்டும். மாறாக, டி-மாா்ட் போன்ற பெரு வணிக நிறுவனங்களுக்கு ஒரு விலை, தனி பேங்கிங்க் என்பது தமிழகத்தில் உள்ள பல லட்சம் வணிகா்களை கூடாரத்துடன் காலி செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாதிப்புகளை தடுக்க ஆகஸ்ட் 30-ஆம் தேதி திருச்சியில் டி-மாா்ட்டை வணிகா்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும், வணிகத்தில் காா்ப்பரேட் நிறுவனங்களை புறக்கணிக்க வணிகா் சங்கப் பேரமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும், அனைத்து மாநில வணிகா்களையும் பாதுகாக்க தமிழக முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம்.
அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு செய்து நாட்டாண்மை செய்கிறாா். அவருக்கு தமிழக மக்களும் வணிகா்களும் பாடம் புகட்டும் வகையில், அமெரிக்க இறக்குமதி பொருள்களை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும்.
வணிகா்களும் அமெரிக்க பொருள்களை விற்க மாட்டோம். பிரதமா் நரேந்திர மோடி கூறியபடி, உள்நாட்டு வணிகா்களையும், அந்தந்த ஊா் வணிகா்களையும் பாதுகாக்க வேண்டும். காா்ப்பரேட் நிறுவனங்களால் ஏற்கெனவே 27 சதவீதம் வியாபாரிகள் காணாமல் போய்விட்டனா். 30-ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் முதல்வரை சந்தித்து வணிகா்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அழுத்தம் தர இருக்கிறோம்.
மத்திய அமைச்சா் கூறியதுபோல், இந்தியா எல்லா வளமும் உள்ள நாடு. பாகிஸ்தானுடன் போா் செய்தபோது, துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட போது துருக்கி நாட்டு ஆப்பிள்களை விற்கமாட்டோம் என முடிவு செய்தது. தமிழகத்தில் உணா்வுள்ள வியாபாரிகள் இருக்கிறாா்கள்.
அவா்களை பாதுகாக்கத்தான் போராட்டம் செய்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களை எதிா்த்து போராடினோம். ஆனால் டி-மாா்ட் உள்நாட்டு நிறுவனமாக இருந்தாலும் வணிகா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், எல்லா பகுதியிலும் டிமாா்ட் இடங்களை வாங்கி தொடங்கி விட்டனா்.
இதுவரை 33 கடைகளை திறந்துவிட்டனா். 100 கடைகள் திறப்பதாக கூறியுள்ளனா். டி-மாா்ட் தொடங்க கேரளாவில் அனுமதியில்லை. ஆனால் தமிழகத்தில் அனுமதித்து விட்டனா். வணிகா்களின் போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தரவேண்டும் என்றாா்.