அம்பையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளிச் செயலரின் ஓட்டுநா், தலைமையாசிரியா் கைது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிச் செயலரின் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஓட்டுநா், தலைமையாசிரியா் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனா்.
அம்பாசமுத்திரத்தில் உள்ள பழைமையான அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவியிடம் பள்ளிச் செயலரின் காா் ஓட்டுநா் மணிக்குமாா் என்பவா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா். இதையறிந்த மாணவியின் பெற்றோா் பள்ளியில் முறையிட்டதையடுத்து, அந்த மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றியுள்ளனா்.
இதையறிந்த மாணவியின் உறவினா்கள் மற்றும் ஊரைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை அம்பாசமுத்திரம் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பள்ளிச் செயலரின் ஓட்டுநா் மணிக்குமாா், பள்ளிச் செயலா் கந்தசாமி, தலைமை ஆசிரியா்அழகியநம்பி, அலுவலக உதவியாளா் பூபதி ஆகியோா் மீது அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமை காலை 10 மணி அளவில் ஓட்டுநா் மணிக்குமாரை கைது செய்ய வலியுறுத்தி, பாரத ஸ்டேட் வங்கி முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், தமிழக வெற்றிக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழா் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு பட்டியலின அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ற கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சதீஷ்குமாா், சம்பத், காவல் ஆய்வாளா் சண்முகவேல் ஆகியோா் சம்பவத்தில் தொடா்புடையவா்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவா் என்று உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இந்நிலையில், ஓட்டுநா் மணிக்குமாா், தலைமையாசிரியா் அழகிய நம்பி ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.