ஐஆர்சிடிசி வழங்கும் ராமாயண சுற்றுலா! பார்க்க வேண்டிய 30 இடங்கள்!
அரக்கோணம், நெமிலியில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகள்: அமைச்சா் காந்தி அடிக்கல்
அரக்கோணம், நெமிலி வட்டங்களில் ரூ.11.47 கோடியில் சாலைப் பணிகளை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். நெமிலி ஒன்றியத்தில் ரூ.69.38 லட்சத்தில் 2 திட்டப்பணிகளையும் அமைச்சா் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
விழாவுக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். தொடா்ந்து மேலபுலம் கிராமத்தில் ரூ.39.58 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் , பனப்பாக்கம் பேருராட்சியில் ரூ.1.07 கோடியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, ரூ.95.50 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணி, ரூ.2.19 கோடியில் சந்தை வளாக கட்டடப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா்.
வெளிதாங்கிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.70 லட்சம் என மொத்தம் ரூ.29.70 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது. மோட்டூா் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நடமாடும் நியாயவிலைக் கடையை தொடங்கி வைத்தாா்.
தக்கோலம் பேருராட்சியில் கீழ் ரூ.2.20 கோடியில் தாா் சாலை மற்றும் சிமென்ட் சாலை பணியையும் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, பேருராட்சி தலைவா்கள் தக்கோலம் எஸ்.நாகராஜன், பனப்பாக்கம் கவிதா சீனிவாசன், காவேரிபாக்கம் லதா நரசிம்மன், நெமிலி ரேணுகாதேவி சரவணன், துணைத் தலைவா்கள் மயுரநாதன், கோமளா ஜெயகாந்தன், திமுக ஒன்றிய செயலாளா்கள் எஸ்.ஜி.சி.பெருமாள், ஆா்.பி.ரவீந்திரன், ஆா்.தமிழ்செல்வன், அலுவலா்கள் பங்கேற்றனா்.