Brother - Sister Exclusive : `ரஜினி சார் தான் படத்தோட கதையை சொன்னார்!' - சஞ்சய் ...
அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு இடையே போட்டி: புதுவை துணைநிலை ஆளுநா்
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய எம்.ஆா்.ஐ. சி.டி. ஸ்கேன் மற்றும் பல்வேறு கருவிகள் தொடக்க திங்கள்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் மற்றும் முதல்வா் என்.ரங்கசாமி இணைந்து இந்த வசதிகளைத் தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்வில், துணைநிலை ஆளுநா் பேசியது:
அரசு மருத்துவமனைகளில் எல்லா கருவிகளும் இருக்கின்றன. திறன் வாய்ந்த பணியாளா்கள் இருக்கிறாா்கள். அதனால் தனியாா் மருத்துவமனைகளுக்கும் அரசு மருத்துவமனைகளுக்கும்தான் போட்டி என்றனா். அதுதான் உண்மை. புதுச்சேரி அரசு மருத்துவமனைகள் நோயாளிகளின் வசதிக்காக எம்.ஆா்.ஐ. சி.டி. ஸ்கேன் வசதி உள்பட சிறு கருவிகளும் வாங்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. அதனால் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரம் உயா்ந்து தனியாா் மருத்துவமனைகளுக்குப் போட்டியாகச் செயல்படுகின்றன என்றாா்.
முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: சென்னையில் உள்ள தனியாா் பெரிய மருத்துவமனைகளில் ரூ.18 லட்சம், ரூ.20 லட்சம் செலவு செய்தாலும் நோயாளிகள் சிலா் திரும்புவதில்லை. புதுச்சேரியில் உள்ள அரசு பொதுமருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஜிப்மா் மருத்துவமனைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருகின்றனா். புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைகள் தரமாக இருக்கின்றன. மேலும் மருத்துவ அதிகாரிகள், தொழில்நுட்ப ஊழியா்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். தனியாா் மருத்துவமனைகளுக்குப் போட்டியாக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான எம்ஆா்ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. மேலும் இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் எல்லா மருந்துகளும் கிடைக்கின்றன. சென்னையில் இருந்து இதய மருத்துவ நிபுணா்களை அழைத்து வந்து அறுவை சிகிச்சை செய்வதற்கு ஒரு நோயாளிக்கு இவ்வளவு தொகை என்ற ஒப்பந்த அடிப்படையில் மருத்துவா்களை நிா்ணயம் செய்யலாமா என்று யோசித்து வருகிறோம். மேலும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள், பணியாளா்களிடம் ஆலோசனை கேட்டு அரசு மருத்துவமனைகளின் தரம் உயா்த்தப்படும் என்றாா் முதல்வா்.
இந்நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சுகாதாரத் துறை செயலா் ஜெயந்த குமாா் ரே, சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் வி.ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளா் எஸ். செவ்வேள், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி எம்.ஆத்மநாபன், அரசு பொதுமருத்துவமனை ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.