சென்னை எழும்பூா் வழியாகச் செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
`அறிஞர் அண்ணாவிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை...' - சொல்கிறார் இராம.ஸ்ரீநிவாசன்
புதிய கல்விக் கொள்கையை ஆதரித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தலைமையில் மதுரையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இராம ஸ்ரீநிவாசன், "புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்தியை திணிப்பது போல திமுக நாடகம் ஆடி வருகிறது. இந்தியா முழுவதும் மூன்றாவது மொழியாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக உள்ளது.

திராவிட பூமியான கேரளாவில் மும்மொழி கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக எல்லையிலுள்ள உள்ள கேரளாப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது, 50 ஆண்டுகளில் தமிழ் வளர்ந்ததை விட மலையாளம் பன்மடங்கு வளர்ந்துள்ளது.
1965 ஆம் ஆண்டில் அண்ணா நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு நேர்மை இருந்தது, அவர் எந்தவொரு இந்தி பள்ளிக்கூடமும் நடத்தவில்லை. மூன்றாவது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறுகிறோம். தமிழகத்தில் இந்தி கற்றுக்கொள்ள விரும்புவர்கள் இந்தி கற்றுக் கொள்ளட்டும், அதைத்தாண்டி கன்னடம், தெலுங்கு, உருது, மலையாளம் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் அந்தந்த மொழிகளை கற்றுக் கொள்ளலாம்.
இந்தி கற்றுக்கொள்ள விடாமல் திமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தால் இந்தியா முழுவதும் தமிழை மூன்றாவது மொழியாக கொண்டு வருவோம், தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில் தமிழை கற்றுக் கொடுக்க பாஜக கோரிக்கை வைத்து வருகிறது.
பிற மாநிலங்களிலும் தமிழை கற்றுக் கொடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தந்த மாநில முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும், தமிழ் வளர்ச்சித் துறை தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தியா முழுவதும் தமிழை கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கவில்லை? கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பது திமுக-வின் நிலைப்பாடு, கல்வி பொது பட்டியலில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் குஜராத் பொருளாதார ரீதியாக உச்சத்தை தொட்டுள்ளது, உத்தரப்பிரதேசம், பீகார் தொடர்ந்து பின்தங்கி இருந்ததற்கு காங்கிரஸ் ஆட்சி தான் காரணம்.
மூன்றாவது மொழியாக இந்தியை படிக்க வேண்டுமென புதிய கல்விக் கொள்கையில் எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை, திமுக-காரர்கள் நடத்தக்கூடிய மும்மொழி பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மூட முடியுமா?, புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கேரளா கர்நாடகா தமிழ்நாடு கட்சிகள் என ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு நிலைப்பாடு எடுக்கிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இரு மொழி கல்வி மட்டுமே கற்றுத் தர முடியும் என்று தமிழக முதலமைச்சரால் அறிவிக்க முடியுமா? தமிழகத்தில் மூன்றாவது மொழி கற்றுக் கொடுப்பதை தமிழக அரசால் நிறுத்த முடியுமா? தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகன் பிரெஞ்சை மூன்றாவது மொழியாக கற்றுக் கொள்கிறார், ஏழை, எளிய மாணவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் கூறுகிறோம்.
இந்தி எதிர்ப்பில் அறிஞர் அண்ணாவிடமிருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை, அண்ணாதுரை எந்தவொரு இந்தி பள்ளிக்கூடமும் நடத்தாமல் இந்தியை எதிர்த்தார், திமுக-காரர்கள் நடத்தும் இந்தி பள்ளிக்கூடங்களை மு.க.ஸ்டாலினால் மூட முடியுமா?" என கூறினார்.
தமிழை மூன்றாவது மொழியாக அறிவிக்க கோரி இந்தியாவில் உள்ள அனைந்து மாநில முதல்வர்களுக்கும் இராம ஸ்ரீநிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.