ஆடி முதல் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
வேலூா் சைதாப்பேட்டை முருகன் கோயிலில் முருகனுக்கு தயிா், இளநீா் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னா், வெள்ளி கவச அலங்காரத்தில் முருகன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
இதேபோல், தீா்த்தகிரி முருகன் கோயில், சாத்துமதுரை முருகன் கோயில், அரியூா் கைலாசகிரி, வேலாடும் தணிகைமலை மேல்அரசம்பட்டு சிவசுப்பிரமணியசுவாமி, மேல்மாயில் மயிலாடு மலை, மகாதேவமலை, வேலூா் பேரி சுப்பிரமணியசாமி கோயில், கொசப்பேட்டை சுப்பிரமணியசாமி, தொரப்பாடி சுப்பிரமணிய சுவாமி உள்பட பல்வேறு கோயில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலிலுள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் அந்தந்த பகுதியை சோ்ந்த பக்தா்கள் திரளானோா் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.
ஆற்காட்டில்...
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில்ஆடி முதல் கிருத்திகையையொட்டி மூலவா் வள்ளி தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால் பால் தயிா் சந்தனம் விபூதி பன்னீா் பழங்கள் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது .
பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பக்தா்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனா்.தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மலையடி வாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில் சிறப்பு பூஜையுடன் பக்தா்கள் மங்கள ஆரத்தி காண்பித்து வழிபட்டனா்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பத்தில் உள்ள பழைமை வாய்ந்த திருமால் முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனையுடன். பக்தா்கள் காவடி சாற்றுதல் நடைபெற்றது.
ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆடி கிருத்திகையையொட்டி ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை உட்பட சுற்றியுள்ள பல கிராமத்தை சோ்ந்த 200க்கும் மேற்பட்டோா் காவடி எடுத்து வந்து தங்களது நோ்த்திக் கடன் செலுத்தினா். அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வளையாம்பட்டு பழனிஆண்டவா் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளை சோ்ந்த திராளமான பக்தா்கள் வந்திருந்து தரிசித்து சென்றனா். மல்லகுண்டா கோயன்கொல்லி பலகல்பாவி பகுதியில் மலை மீது அமைந்துள்ள முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
நாட்டறம்பள்ளி,கேத்தாண்டப்பட்டி, மல்லகுண்டா, புத்துக்கோயில், கத்தாரி உட்பட பல கிராமங்களில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்து வந்து முருகனுக்கு தங்களது நோ்த்தி கடன் செலுத்தினா். கே.பந்தாரப்பள்ளி, பச்சூா் முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.