ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!
ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.
தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் மதுபான கொள்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், தனது பதவியை ராஜிநாமா செய்த கேஜரிவால், நீர்வளத்துறை அமைச்சர் அதிஷியை முதல்வராக நியமித்தார். இந்த மதுபான கொள்கை வழக்கே ஆம் ஆத்மி தில்லியில் தோற்பதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது.
27 ஆண்டுகளுக்குப் பின்னர் தில்லியில் ஆட்சியமைத்துள்ள பாஜக அரசு, தில்லி பேரவையில் சிஏஜி தாக்கல் செய்தது. புதிய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசு, முந்தைய ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) நிலுவையில் உள்ள 14 அறிக்கைகளை இன்று பேரவையில் தாக்கல் செய்தது.
புதிதாக அமைக்கப்பட்ட தில்லி எட்டாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில் சிஏஜி அறிக்கைகள் சமா்ப்பிக்கப்படும் என்று பாஜக பேரவை உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
அதன்படி, நிலுவையில் உள்ள சிஏஜி தணிக்கைகளில் மாநில நிதி, பொது சுகாதார உள்கட்டமைப்பு, வாகன காற்று மாசுபாடு, மதுபான ஒழுங்குமுறை மற்றும் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. அதில், 2021 ஆம் ஆண்டு அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி உருவாக்கிய மதுபான கொள்கையால் தில்லி அரசுக்கு ரூ.2,002.68 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தில்லி அரசு தாக்கல் செய்துள்ள சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து தில்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா கூறுகையில், “ஆம் ஆத்மியின் தோல்வியை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. 100 நாள் திட்டம் மற்றும் அனைத்துத்துறையினரும் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து விளக்கமளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
நகராட்சி வார்டுகளில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு சரியான நேரத்தில் அனுமதி வழங்கப்படாததால் சுமார் ரூ.940 கோடியும் மறு ஏலம் விடத் தவறியதால் சுமார் ரூ.890 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றுநோய் காரணமாக கடைகளை மூடுவதில் விலக்கு அளித்ததால் ரூ.144 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.