இந்தப் படத்தைப் பார்த்தீர்களா? பிளாக்பஸ்டரான சு ஃப்ரம் சோ!
கன்னடத்தில் வெளியான சு ஃப்ரம் சோ திரைப்படம் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் கன்னட மொழித் திரைப்படங்கள் குறித்து பெரிய அபிப்ராயங்கள் இல்லாமல் இருந்த நிலையை கேஜிஎஃப் திரைப்படம் மாற்றியமைத்தது. கன்னட மொழியின் முதல் பான் இந்திய சினிமா என்கிற அங்கீகாரத்துடன் ரூ. 1300 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கவும் செய்தது.
இப்படத்தைத் தொடர்ந்து வெளியான காந்தாரா திரைப்படமும் பல மாநிலங்களில் வரவேற்பைப் பெற்று அபாரமான வெற்றியை அடைந்தது. அடுத்து, காந்தாரா - 2 திரைப்படமும் பெரிய வணிக சாதனையைச் செய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியான சு ஃப்ரம் சோ (su from so) என்கிற கன்னட படம் கர்நாடகத்தில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஹாரர் காமெடி கதையாக உருவான இப்படத்தை ஜே.பி. துமினாட் என்பவர் இயக்கியுள்ளார். ஒரு கிராமத்திற்குள் நடக்கும் நகைச்சுவை பேய்க்கதையான இப்படம் இதுவரை ரூ. 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கன்னடத்தில் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக பல திரையரங்குகளில் அதிகாலை வரை காட்சிகள் திரையிடப்படுகிறதாம்.
அதேநேரம், சென்னையில் சில மல்டிபிளக்ஸ் திரைகளில் ஒரு காட்சி மட்டுமே திரையிடப்படுகிறது. இதனால், காட்சிகளை அதிகரிக்கச் சொல்லி தமிழக ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்!
இதையும் படிக்க: நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆனது?