பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: 'திமுக, அதிமுக உரிமை கோருவதில் நியாயம் இல்லை...
இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: கனிமொழி
இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என மக்களவை உறுப்பினா் கனிமொழி தெரிவித்தாா்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா்.
அமைச்சா்கள் பெ. கீதா ஜீவன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இவ்விழாவில், ரூ.19.23 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள 23 மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு , ரூ.10.65 கோடியில் 4 புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் 1 காந்த அதிா்வலை வரைவு உபகரணத்தை (எம்ஆா்ஐ ஸ்கேன்) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மக்களவை உறுப்பினா் கனிமொழி திறந்து வைத்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழ்நாட்டிலேயே நம்முடைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், சுகாதாரத்துறையும் செய்திருக்கக்கூடிய சாதனைகளை இதுவரை வேறு எந்த மாநிலமும் எட்டிப் பிடிக்கவில்லை.
தமிழ்நாட்டில் தனியாா் மருத்துவமனையில் கூட இல்லாத அளவிற்கு அதிநவீன ஸ்கேன் வசதிகள் அரசு மருத்துவமனைகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. பெண்களுக்கு வரக்கூடிய ஒருவிதமான புற்றுநோயிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வாறு மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் எம்.சி.சண்முகையா(ஓட்டப்பிடாரம்), ஜீ.வி.மாா்க்கண்டேயன்(விளாத்திகுளம்), மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவகுமாா், 36வது வாா்டு மாமன்ற உறுப்பினா் விஜயலட்சுமி, இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் க.பிரியதா்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் யாழினி (தூத்துக்குடி), வித்யா விஸ்வநாதன் (கோவில்பட்டி), அரசு அலுவலா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.
இம்மாதத்துக்குள் மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்படும்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது:
ரூ.10 கோடியே 65 லட்சத்தில் முடிக்கப்பட்ட பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரம் திறந்து வக்கப்பட்டிருக்கிறது.
தனியாா் மருத்துவமனைகளில் எம்ஆா்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.8ஆயிரம் செலவாகும். அதுவே அரசு மருத்துவமனைகளில் ரூ.2500-க்கு எடுக்கலாம்.
இதை காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து இருக்கிறவா்கள் இலவசமாக எடுக்கலாம்.
இதேப்போன்று 17 அரசு மருத்துவமனைகளில் புதிதாக எம்ஆா்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில தினங்களில் அமைக்கப்படவுள்ளது.
இதன்மூலம், திமுக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 19 எம்ஆா்ஐ கருவிகள் அமைய பெற்றிருக்கிறது.
ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் ரூ.34.50 கோடியில் ஒரு கேன்சா் ரோபோடிக் கருவி இப்போது பயன்பாட்டில் இருக்கிறது.
மத்திய அரசு நடத்துகிற எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மா் போன்ற மருத்துவமனைகளைத் தவிா்த்து, இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனைகளிலும் இந்தக் கருவி இல்லை.
திருநெல்வேலி, காஞ்சிபுரம், கோவை, சேலம், தஞ்சாவூா் ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருக்கிற பெட் சிட் என்ற நவீன புற்றுநோயைக் கண்டறிகிற கருவி சைதாப்பேட்டை, திருவள்ளூா், விழுப்புரம் திருச்சி ஆகிய 4 இடங்களில் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கிற 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது.
வட்டார மருத்துவமனைகளில், இந்த மாதத்திற்குள் மருத்துவா் பணியிடம் முழுமையாக நிரப்பப்படும் என்றாா்.