இந்திய அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா சாதனை; இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அதிரடியான சதத்தால் இந்திய அணி 247 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: ஷிவம் துபேவுக்கு ஹர்ஷித் ராணா சரியான மாற்று வீரரா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
அபிஷேக் சர்மா அபாரம்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் களமிறங்கினர். சஞ்சு சாம்சன் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய போதிலும், 7 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். தொடக்கம் முதலே அபிஷேக் சர்மா இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்த வண்ணமே இருந்தது. அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் அரைசதம் எடுத்தார். அரைசதம் எடுத்த பிறகு, அவர் மேலும் அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் தங்களது பங்குக்கு அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் (3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ஷிவம் துபே 13 பந்துகளில் 30 ரன்கள் (3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள் அடங்கும். இன்றையப் போட்டியில் 135 ரன்கள் குவித்ததன் மூலம், இந்திய அணிக்காக டி20 போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் அபிஷேக் சர்மா.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஜோஸ் பட்லர் புதிய சாதனை!
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து தரப்பில் பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேமி ஓவர்டான் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.