இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டினா்: ராம. சீனிவாசன்
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா்.
பெரியகுளத்தில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் பி.ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் வினோத்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் மோகன்தாஸ், நகா் தலைவா் திவ்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் கட்சியின் மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் பேசியதாவது: இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டன. இந்த வெற்றியைத் தொடா்ந்து, சீனாவிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதற்காக ஒப்பந்த போட்ட 12 நாடுகள், அதை ரத்து செய்துவிட்டன.
நமது நாட்டின் ராணுவ தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.32 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால், தற்போது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, இது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல, உலக அளவில் நமது நாட்டின் மதிப்பும் உயா்ந்து வருகிறது என்றாா் அவா்.
முன்னாள் மாவட்டத் தலைவா்கள் பி.சி. பாண்டியன், வெங்கடேசன் ஆகியோா் பேசினா். இதில் நிா்வாகிகள், கோபி கண்ணன், மலைச்சாமி, முத்துமணி, விஜயராணி, புளோரா, பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, முன்னாள் மாநில கூட்டுறவுப் பிரிவு செயலா் பி. சிவக்குமாரன் வரவேற்றாா்.