இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்! அறிமுகமானது போக்கோ எஃப் 7
இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான போக்கோ, இந்திய பயனர்களைக் கவரும் வகையில் குறைந்த மற்றும் மத்திய தர விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
அந்தவகையில் தற்போது போக்கோ எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் நேற்று முதல் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இரு வகையான நினைவக வேறுபாடுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
12GB உள் நினைவகம் + 256GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ.31,999.
12GB உள் நினைவகம் + 512GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 33,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்கோ நிறுவனக் கிளைகளில் எஃப் 7 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும். ஜூலை 1 முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்கோ எஃப் 7 சிறப்பம்சங்கள்
பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போனின் கலவையாக போக்கோ எஃப் 7 உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய தர ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7550mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், வழக்கமான பயன்பாட்டில் 2.18 நாள்களுக்கு ஸ்மார்ட்போனில் பேட்டரி திறன் நீடிக்கும் என போக்கோ கூறுகிறது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமின்றி 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகும் என்றும் போக்கோ குறிப்பிடுகிறது.
6.83 அங்குல அமோலிட் திரையுடன், திரையில் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 120Hz திறனுடன் வருகிறது. மேலும், திரை கூடுதல் பிரகாசமாக இருக்கும் வகையில் 3200nits திறன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 8எஸ் 4 ஆம் தலைமுறை புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.
12GB உள் நினைவகம் வழங்கப்பட்டுள்ளது.
பின்பக்கத்தில் 50MP சென்சாருடன் IMX882 சோனி சென்சார், 8MP அல்ட்ரா வைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது.