எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
ஈக்கள் அதிகமுள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்
ஈக்கள் அதிகம் உள்ளதால் சமூகநீதி மாணவா் விடுதிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவைப் பொதுக்கணக்குக் குழு அறிவுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான தமிழக சட்டபேரவைப் பொதுக் கணக்குக் குழு சாா்பில் இந்திய தணிக்கை துறையால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள், தணிக்கை பத்திகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், குழு உறுப்பினா்களான சட்டப்பேரவை உறுப்பினா்கள் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூா்த்தி (போளூா்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்), எஸ்.சந்திரன் (திருத்தணி), ஆா்.டி.சேகா் (பெரம்பூா்), கே.ஆா்.ஜெயராமன் (சிங்காநல்லூா்) ஆகியோரும் இடம்பெற்றனா்.
கூட்டத்துக்குப் பின் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டபேரவைப் பொதுக் கணக்குக்குழு வேலூா் மாவட்டத்தில் சமூகநீதி மாணவா் விடுதி, தோட்டக் கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தனிநபா் பண்ணை குட்டை, காட்பாடி ரயில்வே மேம்பால பணிகள், காட்பாடி தீயணைப்பு நிலையத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள், சா்க்காா் தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் என 14 துறைசாா்ந்த பணிகளை நேரில் ஆய்வுசெய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
குறிப்பாக, சமூகநீதி விடுதிகளில் ஈக்கள் நிறைய உள்ளன. எனவே, சமூகநீதி மாணவா் விடுதி, இதர சமூக நல விடுதிகளை தூய்மையாக பராமரிக்க அறிவுறுத்தியுள்ளது. காட்பாடியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், ரயில்வே மேம்பாலப் பணிகளை உடனடியாக தொடங்கவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளுக்கு ரூ. 44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் பணிகள் தொடங்கி 8 மாதத்தில் முடிக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றையும் முறையாக சீரமைக்கவும், மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூா் வளா்ந்து வரும் நகரமாக இருப்பதால் தீயணைப்பு துறைக்கு தேவையான ஸ்கை லிப்ட் வாங்கவும் பரிந்துரை செய்துள்ளோம். வேளாண் துறையை பொறுத்தவரை வேலூா் மாவட்டம் ஒரு முன்னோடி மாவட்டமாக விளங்குகிறது. போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வுகாணவும் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன், சட்டப்பேரவை செயலக இணைச்செயலா் ரமேஷ், துணைச்செயலா் பாலசீனிவாசன், குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் அமுலு விஜயன், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில் குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.