வக்ஃப் சொத்துகள் யுஎம்இஇடி வலைதளத்தில் பதிவேற்றம்: மாநிலங்களிடம் மத்திய அரசு வலி...
"ஈரானுக்கு உரிமை உண்டு" - ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்
நேற்று வரை, இஸ்ரேல் - ஈரான் தாக்குதலாக இருந்தது, இன்று முதல் அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் தாக்குதலாக மாறியுள்ளது.
ஈரானின் மூன்று அணு ஆயுத திட்டப் பகுதிகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பே உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனங்களைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
"இஸ்ரேலின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அணு சக்தி மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனங்களைத் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தாக்குதலால், பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறுவதாகும். ஐ.நா சாசனத்தின் கீழ், தங்களைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்குச் சட்டப்பூர்வமான உரிமை உள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
ஈரானுக்கு எதிராக எழுந்து வரும் பதற்றம் மற்றும் வன்முறை மிகவும் கவலையளிக்கிறது. இது அந்தப் பிராந்தியத்தையும், அதற்கு அப்பால் உள்ள இடங்களையும் பாதிக்கும்.
பொதுமக்களின் உயிர்கள், சொத்துகளை மதிக்க வேண்டிய அவசியத்தையும், இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தைக் குறிப்பாக, சர்வதேச மனிதநேய சட்டத்தைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
ஐ.நா சாசனத்தின் படி, பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி".

நேற்று கூட, அமெரிக்க அதிபர் ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்ய இருப்பதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால், தற்போது ஈரான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அமெரிக்காவைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.
காரணம், பாகிஸ்தானும், ஈரானும் அண்டை நாடுகள். ஈரான் மீதான தாக்குதல் பாகிஸ்தானையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதுதான் பாகிஸ்தானின் இந்த நிலைப்பாட்டிற்குக் காரணம்.
