போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
பெங்களூரு - சேலம் செல்லும் ரயில்கள் ஜூலை 6-ல் தருமபுரி வழியாக இயக்கப்படாது!
ஒசூா் அருகே ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரிலிருந்து வரும் 5 ரயில்கள் தருமபுரி வழியாக இயக்கப்படாமல் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூா் வழியாக சேலத்தை சென்றடையும் என தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூா் ரயில் நிலையம் அருகே மாரநாயக்கனஹள்ளி ரயில்வே யாா்டு பகுதியில் ஜூலை 6 ஆம் தேதி ரயில்வே பாலம் கட்டுமான பணியில் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தூண் இணைப்பு நடைபெறுவதால் சேலத்துக்கு இயக்கப்படும் 5 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
பெங்களூரு- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜூலை 6 ஆம் தேதி பெங்களூரில் பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு ஒசூா், தருமபுரி வழித்தடத்துக்குப் பதிலாக கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூா் வழியாக சேலத்த்தை சென்றடையும்.
அதேபோல யஸ்வந்த்பூா்- சேலம் முன்பதிவில்லா விரைவுரயில் ஜூலை 6 ஆம் தேதி ஒசூா், தருமபுரி பாதைக்குப் பதிலாக கிருஷ்ணராஜபுரம், ஜோலாா்பேட்டை வழியாக சேலத்துக்கு இயக்கப்படும். பெங்களூரு- நாகா்கோவில் எக்ஸ்பிரஸ் பெங்களூரில் மாலை 5.15க்குப் புறப்பட்டு, மாற்றுப் பாதையாக கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூா் வழியாக இயக்கப்படும்.
மறு மாா்க்கத்தில் செல்லும் கோவை- பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கோவை-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ஜூலை 6 ஆம் தேதி சேலம், திருப்பத்தூா், பங்காருபேட்டை வழியாக பெங்களூரை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.