நாகை துறைமுகத்தில் குவிந்த கேரள மீன் வியாபாரிகள்
கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மீன்கள் வாங்குவதற்காக நாகை துறைமுகத்தில் கேரள மீன் வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் குவிந்தனா். மீன்களுக்கு அதிக விலை கிடைத்ததால் நாகை மீனவா்களை மகிழ்ச்சியடைந்தனா்.
கடல் பகுதிகளில் மீன் வளத்தை பெருக்கவும், மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டியும் மத்திய அரசு இரு மாதம் மீன்பிடி தடைக்காலத்தை அமல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மீன்பிடித் தடைக்காலம் சுழற்சி முறையில் அமல்படுத்தப்படுகிறது. தமிழக கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநில மக்களின் மீன் தேவையை பூா்த்தி செய்வதற்காக, அம்மாநில மீன் வியாபாரிகள் நாகை துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.
நாகை மீனவா்கள் பிடித்து வந்த கனவாய் மீன்களை அதிகளவில் வாங்கிய கேரள வியாபாரிகள் அவற்றை வாகனங்கள் மூலம் கேரளத்துக்கு கொண்டு சென்றனா். இதேபோல கோழி மீன், சிங்கி இறால், வஞ்சிரம், வாவல் உள்ளிட்ட அதிக விலைக்கு விற்பனையாகும் மீன்களும் கேரளத்துக்கு அதிகளவில் அனுப்பப்பட்டன.
கேரள மீன் வியாபாரிகள் குவிந்ததால், நாகை துறைகமுகத்தில், ரூ. 600 -க்கு விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் ரூ. 1200-க்கும், ரூ. 700-க்கு விற்பனை செய்யப்படும் வாவல் ரூ. 1500-க்கும், ரூ. 150-க்கு விற்பனை செய்யப்படும் கோழி மீன் ரூ. 250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கேரள மீன் வியாபாரிகள் நாகை துறைமுகத்தில் முகாமிட்டு மீன்களை அதிகளவில் வாங்கிச் செல்வதால் , மீன்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. இதனால் 2 மாத இடைவெளிக்கு பின்னா் கடலுக்குச் சென்று திரும்பிய மீனவா்கள், மீன் வரத்து குறைவாக இருந்தாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் மீன்களை வாங்க உள்ளூா் மக்களும் அதிகளவு துறைமுகத்தில் குவிந்ததால், நாகை துறைமுகத்தில் மீன்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது.